அனல் பறக்கிறது அரசியல் களம்: நான் பூ இல்லை, விதை.. ஸ்டாலினுக்கு கமல் பதிலடி!
Recommended Video
மதுரை: நான் பூ கிடையாது, விதை என்று நடிகர் கமல்ஹாசன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி தெரிவிக்கும் வகையில் பேட்டியளித்துள்ளார்.
கவர்ச்சிகரமான காகித பூக்கள் மணக்காது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி தொண்டர்களுக்கு எழுதிய மடலில் குறிப்பிட்டிருந்தார். திமுக ஆயிரம் காலத்து பயிர் என அவர் வர்ணித்திருந்தார்.
ஸ்டாலின் தனது மடலில் மேலும் கூறியதாவது:
பரவுகிறது
கழகம் எனும் ஆலமரத்தினைத் தாங்கி நிற்கும் விழுதுகளும், வேர்களும் நாளுக்கு நாள் பெருகிப் பரவிக் கொண்டே இருக்கின்றன. ஆர்வம் அதிகரித்து அறிவாலயம் வருகின்ற தொண்டர்கள் பலரும் எளிய மனிதர்களாக இருக்கிறார்கள். கிராமத்தினர் பலர் காலில் செருப்புகூட அணிவதில்லை; உடைகள் கசங்கியிருக்கின்றன.
குடும்ப கட்சிதான்
கழகத்தை குடும்பக் கட்சி என்று வெளியிலிருந்து விமர்சனம் வரும்போதெல்லாம், இது குடும்பக் கட்சிதான்; பல இலட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சிதான் என்று நெஞ்சம் நிமிர்த்திட சொல்வதற்குக் காரணம், குடும்பப் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக நம் உடன்பிறப்புகள் இருப்பதால்தான். "நம் அனைவரையும் ஒரே தாய் பெற முடியாது என்பதால் தான், தனித்தனித் தாய்க்குப் பிள்ளைகளாகப் பிறந்திருக்கிறோம்", என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை மறக்க முடியுமா?
காகித பூக்கள்
பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா! தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும்; தமிழ் மக்களின் உரிமைக்கும் உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது. அந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள கோடித் தொண்டர்களில், முன்னிற்கும் தொண்டனாக பெரும் பொறுப்புடன் கழக ஆய்வுக் கூட்டத்தை தொடர்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தனது நீண்ட மடலில் குறிப்பிட்டிருந்தார்.
நான் விதை
ஸ்டாலின் கூறிய, காகித பூக்கள் மணக்காதல்லவா என்ற வாசகங்கள், ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் திடீர் அரசியல் பிரவேசம் குறித்த விமர்சனமாக பார்க்கப்பட்டது. இதுபற்றி மதுரையில், கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, கமல் கூறுகையில், நான் பூ அல்ல, விதை. என்னை முகர்ந்து பார்க்க வேண்டாம், விதைத்து பாருங்கள், வளருவேன். நான் கூட்டணி வைப்பேன் என்று எப்போதும் சொன்னதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். நாளை கட்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும், கொடியையும் கமல் அறிமுகப்படுத்த உள்ளார். முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியை அவர் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். இந்த நிலையில், ஸ்டாலின் கருத்துக்கு கமல் பதிலடி கொடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.