மக்கள் நலனுக்காக ஈகோவை விட்டுகொடுத்து ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார்: கமல்ஹாசன்
கோவில்பட்டி: மக்களின் நலனுக்காக எந்த ஒரு ஈகோவையும் விட்டுக் கொடுத்து நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து செயல்பட தாம் தயார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலுக்காக தென் தமிழகத்தில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கோவில்பட்டியில் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எம்ஜிஆருக்கு நீட்சியாக எந்த நடிகர் வேண்டுமானாலும் இருக்கலாம். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் திமுகவிலும் அதன்பின் அதிமுக ஆரம்பித்த பின்னரும் எம்ஜிஆரை மக்கள் திலகம் என்று தான் அழைத்தார்கள். எம்ஜிஆர் ஏழரை கோடி மக்களுக்கும் சொந்தமானவர். யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம். அதில் நானும் ஒருத்தர்.
தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு சர்வீஸ் பண்ண தான் இருக்கிறது. யார் குறுக்கே ஆட்களை ஏவி விடுகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. எல்லாமே சட்டப்படி நடக்கிறது என்பதை நம்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். அது அவ்வாறாகவே இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.
எம்ஜிஆர் முகத்தை கூட பார்த்திராதவர்களே.. நான் அவர் மடியில் வளர்ந்தவன்.. நினைவிருக்கட்டும்.. கமல்
எங்களை பார்த்து அச்சம் ஏன்?
எங்கள் சுற்றுப் பயணத்துக்கு அனுமதி கொடுத்து மறுக்கப்பட்டிருக்கிறது. திட்டமிட்டு தான் நாங்கள் புறப்பட்டு வந்தோம். ஆனால் அனுமதி மறுப்பு கடிதத்தை எங்கள் கட்சி நிர்வாகிகள் வீட்டில் ஒட்டி உள்ளார்கள். முதலில் எங்களுக்கு அனுமதி கொடுத்தது ஏன் பின்னர் அதை எடுத்தது ஏன்? மக்களைப் பார்த்து அச்சப்பட வேண்டியது குற்றம் செய்தவர்கள் தான். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். ஆகவே எங்களுக்கு எந்த அச்சமும் கிடையாது. நாங்கள் மக்களை தேடிச்சென்று பார்க்கிறோம்.
வேட்பாள நியமனம்
வேட்பாளர் நியமனம் என்பது இப்போது இல்லை. நாங்கள் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறோம். வெறும் பணம் இருந்தால் போதாது; வெறும் படிப்பு மட்டும் இருந்தால் போதாது; மக்கள் நலனில் மக்கள் சேவையில் நலனே இல்லாதவர்கள் வந்து வேட்பாளராக வருவதில் அர்த்தம் இல்லை. அது பெரிய கஷ்டம் கிடையாது. நிறைய பேர் இருக்கிறார்கள்.
ரஜினியுடன் இணைய தயார்
புதிதாக கட்சி தொடங்க வருபவர்கள் ஒரு காரணத்துக்காக வருகிறார்கள். நான் கட்சி தொடங்கிய காரணம் என்னவென்று சொல்லிவிட்டேன். கண்டிப்பாக ஒரு மாற்றம் வேண்டும். நடிகர் ரஜினியும் அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்னும் அவர்களது கொள்கை என்னவென்று தெளிவாக சொல்லவில்லை. ஒற்றை வார்த்தையில் சொல்வதை முழு கொள்கையாக ஏற்றுக் கொள்ள முடியாது. சொல்லட்டும் பிறகு நாங்கள் பேசுவோம். எங்களுக்குள் நட்பு என்பது ஒருவருக்கு ஒருவர் ஒரு போன் காலில் தொடர்பு கொள்ளக் கூடியது. அதில் எங்களுக்குள் உதவி செய்ய முடிந்தால் உதவி செய்வோம். கொள்கை படியும் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எந்த ஈகோவையும் விட்டுக் கொடுத்துவிட்டு நாங்கள் ஒத்துழைப்போம். இது ஏற்கனவே சொன்னதுதான்.
நாங்கள் எப்போதும் ஏ டீம்
நான் காந்தியாருக்கு பி டீம் ஆக மட்டுமே இருப்பேன். வேறு யாருக்கும் நாங்கள் பி டீம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் நாங்கள் ஏ டீமுக்காகவே தயார் செய்து கொண்டு வந்தவர்கள். ஒத்திகை பார்த்து பயிற்சி எடுத்து வந்தவர்கள். நாங்களே ஏ டீம். ஊழல் மேளங்கள் முழங்கி கொண்டிருக்கும்போது நியாயம் பேசினால் கேட்காது. அவர்களுக்கு. ஊழல் மேளம் கொட்டுவதை நிறுத்தினால் நாங்கள் என்ன சொல்கிறோம் என்பது அவர்களுக்கு புரியும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
என்ன செய்து என்ன பயன்?
இதேபோல் கோவில்பட்டியில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் பேசியதாவது: அலிபாபாவுக்கே 40 திருடர்கள் தான். இங்கு 234 பேர் உட்கார்ந்து கொண்டு நல்ல முறையில் மக்கள் ஊழியம் செய்பவர்களை எல்லாம் நதிகளை எல்லாம் சாக்கடைகள் ஆக மாற்றி, நல்லவர்களை எல்லாம் கெட்டவர்கள் ஆக்கி, நேர்மையானவர்களையெல்லாம் ஊழல்வாதிகளாக மாற்றி என்ன ஆட்சி செய்து என்ன பயன்.... அது நாசமாகப் போகவில்லையே என்று மக்கள் ஏன் இன்னும் சபிக்காமல் இருக்கிறார்கள் என்று நான் கேட்கிறேன். எனக்கு சாபத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் செயலில் நம்பிக்கை உண்டு.
ஊழலை ஒழிக்க வேண்டும்
ஊழலை ஒழிப்பது மேல்மட்டத்தில் இருந்து நடக்க வேண்டும். அரியணையில் அமரவே நேரமில்லாமல் வேலை செய்தால்தான் நாடு சற்று முன்னேற்றம் அடையும். ஊழல் தான் உலகம் என்று யாரும் முடிவெடுக்கவில்லை. வாய்ப்பிருக்கிறது நேர்மையாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை நாம் வீண் போக விட்டு விடக் கூடாது. காந்தியை போன்றே இன்னொரு ஆள் வர முடியுமா என்றால் நிச்சயம் வர முடியும். அதற்கு மக்கள் வழிவிட வேண்டும். ஓட்டுக்கு காசு கொடுப்பது மக்களை ஏமாற்றும் செயல். உங்களின் ஒரு பாக்கெட்டில் இருந்து எடுத்து உங்களின் மற்றொரு பாக்கெட்டுக்கு தருகிறார்கள். அப்படியே அந்த பணத்தை வாங்குவதாக இருந்தால் ஐந்தாயிரம் ரூபாய் போதாது. 5 லட்சம் வாங்குங்கள். உங்கள் மதிப்பை நீங்களே உயர்த்திக் கொண்டால்தான் உயரும். எடுப்பதற்கான வழி தான் பணம் கொடுப்பது. ஆகவே அது ஒன்றும் தர்ம காரியம் இல்லை. இது எல்லாம் சுயநல வேட்டை. அதற்கு மக்கள் பலியாகி விடக்கூடாது. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.