கிறிஸ்துவ மதத்தை கைவிட்டு மதமற்றவனமாக மாறியது இப்படிதான்.....
கேள்வி: நீங்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினீர்கள் என்பது புதிய செய்தி. இப்போது கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?
பதில்: என் சான்றிதழ்படி நான் இந்து ஆதிதிராவிடர். என் அப்பா தன் இளமைக்காலத்தில் கிறிஸ்தவராக இருந்திருக்கிறார். என் சித்தப்பா கிறிஸ்தவர்தான். கிறிஸ்தவ மதத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு மதம் மாறியவுடன் நான் ஒரு தீவிர கிறிஸ்தவனாகவே இருந்தேன்.
அப்புறம் எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு வெளியேறி இப்போது மதமற்றவனாகத்தான் இருக்கிறேன். கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனது.
கேள்வி: கடவுள் நம்பிக்கை அற்றுப்போய் மதமற்றவவராய் உங்களை மாற்றியது எது?
பதில்: சினிமா குறித்தெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தாலும் ஒருபக்கம் நன்றாகப் படிப்பவனாகத்தான் இருந்தேன். ஆனால் ஆங்கிலம் வராது. பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலப்பாடத்தில் தோல்வி அடைந்தேன்.
என் அப்பா ஓ.ஏ. எனப்படும் அலுவலக உதவியாளராக இருந்தார். அம்மா வீட்டில் இருந்து பாடுகளைச் சுமப்பவர். அப்பாவுக்கு என்னை இன்ஜினியராக்கிப் பார்க்கவேண்டுமென ஆசை.
என் அண்ணன் புதுக்கல்லூரியில் பூவை மூர்த்தியாரின் உதவியுடன் கல்லூரிக்குள் நுழைந்தான். அவன்தான் எங்கள் தலைமுறைக்கு முதல் பட்டதாரி. எங்கள் ஊருக்கும் கூட. பூவை மூர்த்தி மிக நல்ல மனிதர். எங்கள் பெரியப்பா மகன் ஒருவருக்கும் அவர் முயற்சி செய்துதான் ஒரு கல்லூரியில் இடம் வாங்கித் தந்தார்.
இந்த நிலையில் நான் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்ததை அப்பாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் பணியாற்றிய அரசாங்க அலுவலகத்தில் எல்லோருடைய பிள்ளைகளும் டாக்டர், இன்ஜினியர் என்று படிக்கையில் அதுபோலவே நானும் ஆகவேண்டும் என ஆசைப்பட்டவர்.
ஆங்கிலத் தேர்வை மீண்டும் எழுத நேர்கையில் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். கேள்வித் தாளை திறக்குமுன்னும் கூட ஜெபித்தேன். நன்றாகவே எழுதியது போலத் தெரிந்தது. ஆனால் 68 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மதிப்பெண்களில் மீண்டும் தோல்வி. எதற்குமே அழாத எனக்கு அழுகை வந்தது.
அப்போது பல பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைகளை எல்லாம் ஏன் கடவுள் தீர்க்கவில்லை என்று கேள்வி வந்தது. இன்றிலிருந்து கடவுள் இல்லை என்று நினைப்போம். நம் வேலையைப் பார்ப்போம். என்னதான் நடக்கிறதென்று பார்ப்போம் எனத் தோன்றியது.
எனக்கு ஆங்கில இலக்கணம் வராது. ஆகவே அடுத்த முறை எப்படியாவது கல்லூரியில் சேரவேண்டுமென்றால் ஆங்கிலம் பாஸ் செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் முழு புத்தகத்தையும் அப்படியே மனப்பாடம் செய்துகொண்டு போனேன். அப்படியும் 105 மதிப்பெண்கள்தான் பெற்று பாஸானேன்.
அப்போது தோன்றியது. கடவுள் எல்லாம் சும்மா. ஒன்றுமில்லை. நான் முயற்சி செய்து படித்தால் நான் ஜெயிப்பேன். கடவுளால் ஒன்றும் முடியாது. கடவுள் கிடையாது என்று தோன்றியது. அத்தோடு ஒரு முழுக்கு போட்டுவிட்டேன். அப்போதுதான் அம்பேத்கரை வாசித்தேன். தினம் சாதிப் பிரச்சனை.
ஒரு மரத்தடியில் கீழ் உட்கார்ந்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தாலும் இறுதியில் அது சாதி குறித்த பேச்சோடுதான் முடியும். அவன் அப்படிச் சொன்னான், இப்படிச் செய்துவிட்டான் என்று நண்பர்கள் பேசிக்கொள்வோம். எதைத் தொட்டாலும் அது சாதியில் முடிந்தது. இன்றுவரை என்னைத் தொடர்வதும் அதுவாகவே இருக்கிறது.
மொத்தமாக சாதி, மதம் எல்லாவற்றிலிருந்தும் வெளியேறினேன். அப்போதுதான் பெரியாரைப் படித்தேன். கல்லூரியில் என் ஜூனியரான அனிதாவைத்தான் மணந்திருக்கிறேன். காதலித்த காலத்தில் நானும் அனிதாவும் எழும்பூர் மியூசியத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது போலீஸ் வந்து எங்களை அழைத்துக்கொண்டு போனது.
என் கையில் அப்போது பெரியாரின் புத்தகம் இருந்தது. அதைப் பார்த்த போலீஸ்காரர். 'இவரைப் படிக்கிறியா? அப்போ நீ உருப்பட்டுடுவே' என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
இவ்வாறு பா. ரஞ்சித் கூறியுள்ளார்.