நீட் தேர்வை எதிர்த்து அமைதிப் போராட்டம்... அழைப்பு விடுக்கும் கிருஷ்ணப்ரியா!
நீட் தேர்வை எதிர்த்து அமைதிப் போராட்டத்திற்கு இளவரசியின் மகளும் கிருஷ்ணப்ரியா ஃபவுண்டேஷனின் அறங்காவலர் கிருஷ்ணப்ரியா அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை : நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் செப்டம்பர் 17ம் தேதி அமைதிப் போராட்டம் நடத்தப்படும் என்று இளவரசியின் மகள் கிருஷ்ப்ரியா அறிவித்துள்ளார்.
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், ஏழைகளை பாதிக்கும் நீட் தேர்வை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அப்போது இளவரசியின் மகளும் கிருஷ்ணப்ரியா தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர் கிருஷ்ணப்ரியா கடந்த 12ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் உச்சநீதிமன்றம் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் கிருஷ்ணப்ரியா அறிவித்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் மீண்டும் செப்டம்பர் 17ம் தேதி சென்னையில் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நீட் தேர்வுக்கு எதிராக அமைதிப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
போராட்டத்திற்கு அழைப்பு
இது தொடர்பாக சமூக ஊடகங்களிலும், செய்தித் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் வீடியோப் பதிவில் கிருஷ்ணப்ரியா தான் அறிவித்துள்ள போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். வீடியோவில் உள்ள தகவல்களில் கூறப்பட்டுள்ளதாவது : அனிதாவின் மரணம் தமிழகத்தின் இதயத்தை நிலை குலையச் செய்துள்ளது.

கேள்விக்குறியாகும் சமூக நீதி
நம்மில் ஒருவரை அநீதிக்கு பலி கொடுத்துவிட்டோம். இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் எத்தனையோ அனிதாக்களின் நிகழ்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அநீதியை தட்டிக் கேட்க போராட்டம்
கல்வி முறையில் சமநிலை இல்லை, ஆனால் தேர்வு மட்டும் ஒரே முறையில் நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் சமத்துவம் என்பதை ஏற்க முடியாது. அநீதியை தட்டிக் கேட்க அனைவரும் ஒற்றமையோடு போராட வேண்டும், என்றும் தற்கொலை முடிவை இனி யாரும் மேற்கொள்ளக் கூடாது என்பதற்காகவும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

காவல்துறை அனுமதியுடன்
நான் நடத்தும் "சாமானிய மக்களின் நீட் எதிர்ப்பு அறவழி போராட்டம்" உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, பொது மக்களுக்கு இடையூறு இன்றி அறவழியிலும் , அமைதியான முறையிலும் நடக்க இருப்பதாலும், காவல்துறையின் அனுமதியினை முறையாக பெற்றிருப்பதாலும் , எவ்வித தயக்கமும் இன்றி தாங்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கிருஷ்ணப்ரியா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications