கர்நாடகாவுக்கு ஒரு நியாயம்.. தமிழகத்திற்கு இன்னொரு நியாயமா? மெரினா மனித சங்கிலியில் இளைஞர்கள் ஆவேசம்
சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: மெரினா கடற்கரையில் இன்று காலை திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி இன்று மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்கள் அங்கு திரண்டுள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கலுக்கு முன் தீர்ப்பளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தீவிரமடைந்த போராட்டம்
இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மெரினாவில் மனிதச்சங்கிலி
பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டுக் ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றன. சென்னை மெரினாவில் இன்று காலையிலேயே திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.
2 கி.மீ தொலைவுக்கு நின்ற இளைஞர்கள்
மெரினா கடற்கரை சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கும் மேலாக மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியபடி மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற தடையை ஏன் மீறக்கூடாது?
இதில் பங்கேற்ற இளைஞர்கள் காவிரி விவகாரத்தில் கர்நாடகா உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிய போது தமிழகம் ஏன் உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என கேள்வி எழுப்பினர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
தடையை மீறுவோம்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்காவிட்டால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஏராளமான இளம்பெண்களும் கலந்துகொண்டனர்.
பேஸ்புக்கால் சேர்ந்த கூட்டம்
https://www.facebook.com/memeschennai/ இந்த பேஸ்புக் பக்கம் மூலமாகத்தான் சென்னை மெரினா மனித சங்கிலி போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.வெளிநாடுகளைப் போல் தமிழகத்திலும சமூக வலைதளங்கள் மூலமாக நடைபெறும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றனர்.