ராமமோகன ராவ் தலைமைச் செயலக அறையில் சோதனை ஏன்? வருமான வரித்துறை விளக்கம்
தலைமைச் செயலகத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது ஏன் என்பது குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் தலைமைச் செயலக அறையில் சோதனை நடத்தப்பட்டது ஏன் என்பது குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
வருமான வரி அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளதாவது: மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டியின் வீட்டில், நாங்கள் பறிமுதல் செய்த ஆவணங்கள் அடிப்படையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவு சார்பில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரையும், அவரது நண்பர்களையும், சி.பி.ஐ. கைது செய்தது.

சேகர் ரெட்டியின் வட மாநில நண்பர்களும், அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டனர். அதனால், தன் வீட்டுக்கு, சி.பி.ஐ. அல்லது அமலாக்கப் பிரிவு போன்ற, கைது செய்யும் அதிகாரம் படைத்த, மத்திய புலனாய்வு அமைப்புகள் வரலாம் என, ராமமோகன ராவ் எதிர்பார்த்து இருக்கிறார்.
சோதனையிடச் செல்லும் இடங்களில், மொபைல் போன்களை, 'சுவிட்ச் ஆப்' செய்யும்படி சொல்லி விடுவது வழக்கம். ராம மோகன ராவ், தலைமைச் செயலாளர் நிலையில் இருந்ததால், அவரை பேச அனுமதித்தோம்.
தனது தனி உதவியாளரை போனில் அழைத்து, தலைமைச் செயலகமான கோட்டையில் உள்ள அறையில், இரு மொபைல் போன்கள் இருப்பதாகவும், அதை, டிரைவரிடம் எடுத்து கொடுக்கும்படியும் கூறினார். அதன் பிறகுதான், கோட்டையில் சோதனை நடத்த, வாரண்ட் ரெடி செய்தோம். அந்த மொபைல் போன்களை, அவர் வீட்டுக்கு கொண்டு வருவதில்லை. சொந்த உபயோகத்திற்காக வைத்திருந்தார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
குடும்பத்திற்கே தெரியாமல் அந்த செல்போன்களை அவர் ஏன் பயன்படுத்தினார் என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அந்த போன்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications