மன்னார்குடியை குறி வைத்துக் குதித்த வருமானவரித்துறை... 6 இடங்களில் அதிரடி ரெய்டு
சசிகலா கட்டுப்பாட்டில் இருக்கும் பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடக்கும் நிலையில் மன்னார்குடியில் மட்டும் 6 இடங்களில் நடக்கிறது.
Recommended Video

மன்னார்குடி: தமிழ்நாடு முழுக்க சசிகலா கட்டுப்பாட்டில் இருக்கும் பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இந்த நிலையில் அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் மட்டும் 6 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு முழுக்க மொத்தம் 160 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மன்னார்குடியில் மட்டும் மொத்தம் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மன்னார்குடியில் சசிகலா தம்பி திவாகரன் ஆதிக்கம் செலுத்திவரும் அனைத்து இடங்களிலும் சோதனை நடந்து கொண்டு இருக்கிறது.
காலை 7.30 மணிக்கு சரியாக திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். சுந்தரக்கோட்டையில் இருக்கும் செங்கமலத்தாயார் பெண்கள் கல்லூரியில் இன்னும் சோதனை நடைபெறுகிறது.
அதேபோல் அந்த கல்லூரியில் வேலை பார்க்கும் அன்பு என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. இவர் அந்த கல்லூரி உரிமையாளர் திவாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.
தற்போது மன்னை நகரில் இருக்கும் திவாகரனுக்கு சொந்தமான வீட்டில் வருமான வரி சோதனை தொடங்கி இருக்கிறது. கீழதிருப்பாலக்குடியில் திவாகரனின் உதவியாளர் விநாயகம் வீட்டிலும், அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிய வீடியோ ஒன்று தன்னிடம் உள்ளது என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் தெரிவித்தார். அந்த வீடியோவை வெளியிட்டால் பலரின் சாயம் வெளுத்துவிடும் என்றும், விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் மேலும் கூறினார். இந்நிலையில் திவாகரனின் வீட்டில் இன்று வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications