எஸ்.பி.பட்டிணம் காவல் நிலைய படுகொலை: ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்
சென்னை: சையது முகம்மதுவின் கொலைக்கு காரணமான துணை ஆய்வாளர் காளிதாஸ் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் கொலை வழக்கை பதிவு செய்யவேண்டும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவும் இந்திய தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் அபூர்வ வர்மாவை நேரில் சந்தித்து அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக கடந்த 14ந்தேதி அழைத்து செல்லப்பட்ட செய்யது முஹம்மது என்ற இளைஞர் எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய துணை ஆய்வாளர் காளிதாஸால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வெறிச் செயல் குறித்து கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், நேற்று (15ந்தேதி) தமிழக கூடுதல் காவல்துறை தலைவர் ராஜேந்திரனை சந்தித்து, படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட துணை ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தார்
இதனையடுத்து, காவல்துறையின் நடவடிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில் இன்று தமிழக உள்துறை செயலாளர் அபூர்வ வர்மாவை நேரில் சந்தித்த எஸ்.எம்.பாக்கர் தலைமையிலான தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகள்,செய்யது முகம்மதுவின் கொலைக்கு காரணமான துணை ஆய்வாளர் காளிதாஸ் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் கொலை வழக்கை பதிவு செய்யவும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தினர்.
உள்துறை செயலாளரை சந்தித்த பின்னர் தலைமை செயலகத்தில் திரண்டிருந்த செய்தியாளர்கள் மத்தியில் பேசியஎஸ்.எம்.பாக்கர்,'' செய்யது முஹம்மது துணை ஆய்வாளரால் கொலை செய்யப்பட்டு மூன்று நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நேற்று காவல்துறை கூடுதல் தலைவர் ராஜேந்திரனை சந்தித்து கொலைக்கு காரணமான துணை ஆய்வாளர் காளிதாஸ் மீது 302 வது பிரிவின் கீழ் கொலை வழக்கை பதிவு செய்ய வேண்டும் என முறையிட்டிருந்தோம்.உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் படி பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்திருந்தார்.
ஆனால் இதுவரை உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை;காளிதாஸ் இந்த நிமிடம் வரை கைது செய்யப்படவில்லை.இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டும் என்றெல்லாம் சிலர் கோரிக்கை வைக்கிறார்கள்.சி.பி.சி.ஐடியும் மாநில அரசின் கட்டுப்ப்பாட்டில் உள்ளது. தவிர இதற்கு எந்த விசாரணையும் தேவை இல்லை என்கிற வகையில் இது அப்பட்டமான கொலை என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
அதனால் துணை ஆய்வாளர் காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை சிறைபடுத்துவதுதான் நியாயமான நடவடிக்கையாக இருக்க முடியும்.காளிதாஸ் மீது கொலை வழக்கை பதிவு செய்யாதவரை செய்யது முகம்மதுவின் பிரேதத்தை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் உறுதி காட்டி வருகின்றனர்.
இதே கோரிக்கையை முன் வைத்து சென்னை உயர் நீதி மன்றத்தில் அவர்கள் வழக்கும் தொடுத்துள்ளனர். ஏற்கெனவே சென்னை நீலாங்கரை சிறுவன் தமீம் அன்சாரி போலீசாரால் துப்பாக்கி சூட்டுக்கு ஆளான போது அந்த பிரச்சனையை முன்னெடுத்து போராடிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத், செய்யது முஹம்மது வழக்கிலும் நீதி கிடைக்கும் வரைபோராடும்.
இந்த சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதால் மாநில மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.