இரும்புத் தாது ஏற்றுமதி முறைகேடு: சேலம் காபி துாள் கம்பெனி உள்பட 19 இடங்களில் சிபிஐ ரெய்டு
சேலம்: இரும்புத் தாது ஏற்றுமதியில் நடந்த முறைகேடு குறித்து சேலம் உள்பட 19 இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கடந்த 2009-2010ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலிகிரி துறைமுகத்தில் இருந்து ரூ.200 கோடி மதிப்புள்ள 21 லட்சம் டன் இரும்புத் தாது சட்டவிரோதமாக பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிபிஐ 22 வழக்குகள் பதிவு செய்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், பெல்லாரி, ஹோஸ்பெட், சந்தூர், கோவா, சேலம், கொல்கத்தா, மும்பை, குர்காவ்ன் மற்றும் பெல்காம் ஆகிய 10 நகரங்களில் உள்ள 19 நிறுவனங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சிபிஐ அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் 270 முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள தனியார் காபி தூள் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று சோதனை நடந்துள்ளது. மேலும் அந்நிறுவன உரிமையாளரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.