ரஜினி, கமல் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்க திமுக பலே திட்டம்!
சென்னை: ரஜினி மற்றும் கமல் ரசிகர்களை அதிமுகவுக்கு எதிராகத் திருப்ப திமுக மேலிடத்திலிருந்து மாவட்ட அளவிலான நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுகள் பறந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரோ இல்லையோ அவரது பெரும் கூட்ட ரசிகர்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளதாம்.
கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற ஒன்று உருவாகி, திமுகவின் வாக்குகளை அது கபளீகரம் செய்து, அதிமுகவே மீண்டும் ஆட்சியமைக்க உதவியதைப் போல அரசியலில் ரஜினி இறங்கி வாக்குகளைப் பிரித்து தங்களுக்கு எதிர் சூழல் உருவாகிவிடக் கூடாது என்பதில் திமுக தெளிவாக உள்ளது.

உதவி மழை
ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகளை மாவட்ட திமுக செயலாளர்கள் அணுகி, தேவைப்படும் உதவிகளைச் செய்ய தொடங்கியுள்ளார்களாம். நிதி உதவியோ அல்லது வேறு எந்த வகை உதவியாக இருந்தாலும் செய்து தரத் தயார் என்று உறுதியளித்துள்ளனர். இதனால் ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகள் ஏக குஷியில் உள்ளனராம்.

திட்டம்
திமுகவின் குறிக்கோள் ஒன்றுதான். ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும் ரஜினி ரசிகர் வாக்குகளைக் கொத்தாக அள்ளலாம். ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தாலும், அவரது ரசிகர்மன்றத்தினர், திமுகவிடம்தான் விசுவாசமாக இருப்பார்கள் என்பதுதான் திமுக தலைமை திட்டமாம். குறைந்தபட்சம் மறைமுகமாவது உதவுவார்கள் என நினைக்கிறது திமுக.

கமலுக்கும் கண்
அதேபோல திமுகவின் தற்போதைய செயல்படும் தலைமையின் குடும்பத்தார் ஒருவர் கமலஹாசனுடன் நெருக்கமாக இருக்கிறாராம். அரசுக்குக் குடைச்சல் கொடுத்து ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலும் நாங்கள் உங்களுக்குக் கைகொடுப்போம் என அந்த வாரிசு கமலுக்கு உறுதியளித்துள்ளாராம். கமல் தன்னை காட்சி சார்ந்தவராக காட்டவிரும்பவில்லை.

பொது இடத்தில் விழா
கமல் உள்ளத்தைப் புரிந்துகொண்டுதான் முரசொலி விழாவை அண்ணா அறிவாலயத்தில் நடத்தாமல் பொது இடத்தில் நடத்த அந்த வாரிசு ஐடியா கொடுத்தாராம். பொது இடத்தில் நடத்தினால் கமல் அதற்கு வர வாய்ப்பு அதிகம் என்பது அவரது திட்டம். ரஜினியையும் அழைத்துள்ளது, இவ்விரு முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் வாக்குகளைக் கவரத்தான் என்கிறது அண்ணா அறிவாலய வட்டாரம்.












Click it and Unblock the Notifications