யானைப் பசிக்கு சோளப் பொறியா... என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா?
சென்னை: அரசு அறிவித்துள்ள நிவாரண நிதியைக் கேட்டு, ‘யானைப் பசிக்கு சோளப் பொறியா' என்கிறார்கள் பாதிக்கப்பட்டோர்.
ஒரே நாளில் பலரது வாழ்நாள் சேமிப்பை கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டுச் சென்றுள்ளது வெள்ளம்.தலைநகர் சென்னையில் மட்டுமல்ல காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழையினால் ஏற்பட்ட சேதம் அதிகம்.
ஏற்கனவே ஒரு மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்டு கொண்டிருந்த மக்களை, இரு கோடுகள் தத்துவத்தில் அடுத்த வெள்ளம் புரட்டி எடுத்திருக்கிறது.
நிவாரண நிதி...
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரண நிதியை அறிவித்துள்ளது தமிழக அரசு. ஆனால், அது மக்களுக்கு போதுமானதாக இருக்குமா என்றால், நிச்சயமாக இல்லை.
பெயிண்ட் அடிக்கவே போதாது...
அரசு தரும் ஐந்தாயிம், பத்தாயிரம் ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் குமுறலாக இருக்கிறது. வெள்ளத்தால் பாசி பிடித்துள்ள வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கக் கூட இது பத்தாது என்பது அவர்களின் கருத்து.
பரண்களில் தஞ்சம்...
பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கடந்த முறை வெள்ளம் கற்றுத் தந்த பாடத்தில், கீழ்த்தளத்தில் குடியிருந்தவர்கள் விலையுயர்ந்த பொருட்களை பரண்களில் பத்திரப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.
மாடியையும் எட்டிப்பார்த்தது...
ஆனால், இம்முறை வெள்ளம் மேலும் ஆக்ரோஷமாக முதல் தளத்தை எட்டிப் பிடித்தது. இதனால் கீழ்தளத்தில் குடியிருந்தவர்களின் வீடுகளில் இருந்த அனைத்துப் பொருட்களும் நீரில் மூழ்கி பாழாயின.
அத்தியாவசியப் பொருட்களின் மதிப்பு...
இவ்வாறு நீரில் மூழ்கிப் பாழான கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், சமையல் பாத்திரங்கள், மின் விசிறிகள், மின் விளக்குகள் என இவற்றின் மதிப்புகளைக் குறைந்த பட்ச விலையில் கணக்கிட்டாலே அவை நிச்சயம் 20 ஆயிரத்தைத் தாண்டும்.
நீரில் மூழ்கிய வாகனங்கள்...
இது தவிர இரு சக்கர மற்றும் கார்களும் வெள்ளத்தில் மூழ்கின. சில மோட்டார் வாகன நிறுவனங்கள் மட்டும் இலவச சர்வீஸ் முகாம் நடத்த சம்மதித்துள்ளன. அதிலும், ஸ்பேர் பார்ட்ஸ் இலவசமாக மாற்றப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.
இப்படித்தான் இருக்கும்...
எனவே, எப்படியும் பி.எம்.ஐ. மட்டும் பார்த்து விட்டு, எங்கள் கிளீனிற்கு சிகிச்சைக்கு வாங்க என அழைக்கும் பூங்காவில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைகள் போலத் தான் இந்த இலவச சர்வீஸ் முகாம்களும் இருக்கப் போகிறது என்கிறார்கள் பாதிக்கப்பட்டோர்.
அழையா விருந்தாளியான கழிவுநீர்...
அதேபோல், வீடுகளை நீர் சூழ்ந்ததால் அவற்றில் கழிவுநீரும் கலந்து அழையா விருந்தாளியாக வீட்டுக்குள் வந்து தங்கிச் சென்றுள்ளது. எனவே, வீடுகளை நன்றாக சுத்தப்படுத்தினால் மட்டுமே அவற்றில் மீண்டும் குடியேற முடியும்.
இதற்கும் இலவச சர்வீஸ்...
பல்வேறு இடங்களில் இவ்வாறு சுத்தப்படுத்தி தருவதற்கு ஊழியர்கள் இரண்டாயிரத்திற்கும் அதிகமாக பணம் வசூலிக்கின்றனர். தெருக்களை துப்புரவு ஊழியர்களைக் கொண்டு அரசு சுத்தம் செய்வது போல, இதற்கும் ஏதாவது வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
வீணான மருந்துகள்...
இது தவிர வீட்டில் இருந்த சாதாரண முதல் காஸ்ட்லி மருந்துகள் வரை அனைத்தும் வெள்ள நீரில் ஊறி வீணாகி விட்டது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்டோருக்கு தேவையான இலவச மருந்துகளைத் தரவும் அரசு நடவடிக்கை எடுக்கலாம். ஏனென்றால் வெறும் டிடி ஊசியும், காய்ச்சல் மாத்திரையும் மட்டும் எல்லாருக்கும் பத்தாது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உயிர்கள்...
கணக்கில் காட்டப்பட்டும், காட்டப் படாமலும் வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆடு, மாடு, கோழி மட்டுமின்றி பல இடங்களில் வீட்டில் ஒரு உறுப்பினராகவே கருதப்பட்டு வந்த செல்லப்பிராணிகளும் வெள்ளத்தில் பலியாகியுள்ளன.
படகுகளில் இறுதி ஊர்வலம்...
இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும் முடியாமல், இரண்டு மூன்று நாட்கள் வீட்டிலேயே வைத்திருந்து, பின் படகு மூலம் கொண்டு சென்ற பரிதாப காட்சிகளும் ஆங்காங்கே அரங்கேறின.
கேள்விக்குறியான எதிர்காலம்...
முக்கிய ஆவணங்கள், திருமணங்களுக்காக சேர்த்து வைத்திருந்த ஆபரணங்கள் என வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவை ஏராளம். அவற்றை மீண்டும் பெற இலவச முகாம்கள் அமைக்கப் பட்டாலும், வேலைக்கு விடுப்பு எடுத்து மக்கள் அலைய வேண்டிய நீண்ட தூர பயணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காத்திருக்கிறது.
கவலையே நோயானது...
பென்சன்களை மட்டுமே நம்பி இருந்த முதியோர்கள் பலர், ஆவணங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அவற்றை எப்படி மீண்டும் பெறப் போகிறோம் என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனாலேயே அவர்களது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீரோடு கூறுகின்றனர்.
திடீர் செலவுகள்...
வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய அனைவருமே நிவாரண முகாம்களை மட்டும் நம்பிச் செல்லவில்லை. எனவே பயணம், உணவு, தங்குமிடம், உடை என திடீர் செலவுகள் ஏராளமோ ஏராளம்.
மனிதர்களின் சதி..
இயற்கையின் சதி பாதியென்றாலும், மனிதர்களின் அஜாக்கிரதையால் தான் இந்த பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. யாரோ சிலர் செய்த தவறுக்கு அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நைட்டி போதுமா?
அரசு தரும் ஒரு வேட்டி, சேலை, நைட்டி மட்டும் நிவாரணமாக போதுமா. மாற்றுத் துணி இல்லாமல் கட்டியிருக்கும் ஆடையையும், நிவாரணமாக தரப்படும் ஆடையையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனச் சொல்லாமல் சொல்கிறார்களோ?
கேள்விக்கென்ன பதில்...
பொருளாதார பாதிப்புகள், உடல்ரீதியான பாதிப்புகள் இவை என்றால், மன ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு யாராலும் நிவாரணம் தரவே முடியாது. வெள்ளம் வடிந்த நிலையில் வீடு திரும்பும் பெற்றோரிடம், ‘திரும்ப தண்ணீர் வந்துடுமா, நம்மளையும் அடிச்சிட்டுப் போயிருமோ' என பயத்தோடு கேட்கும் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்லுவது.
மன அழுத்தம்...
காலத்தால் ஆறாத வடுவாக, வீட்டைச் சுற்றி தண்ணீர், நடந்து சென்ற சாலைகளில் படகுகளில் மீட்கப்பட்டது, காரணம் புரியாமல் நிவாரண முகாம்களில் தங்கியது, நீரில் அடித்துச் செல்லப்பட்ட பொம்மைகள், பள்ளிப் புத்தகங்கள் என எத்தனையோ காட்சிகள் பதிவாகியுள்ளதே. அதனை எவ்வாறு அழிக்கப் போகிறோம்.
ஸ்டிக்கர் மட்டுமே...
மொத்தத்தில் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி எதிர்காலத்தை கேள்விக் குறியோடு எதிர் நோக்கியிருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காயத்தின் மீது மருந்து என ‘ஸ்டிக்கர்' ஒட்டுவது போல் தான் இருக்கிறது இந்த நிவாரண நிதி அறிவிப்பு என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கருத்து.