காதல் போயின் சாதலா?
Recommended Video
- வந்தனா ரவீந்திரதாஸ்
தமிழகத்தில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது....?
திருச்சி திருவெறும்பூரில் போக்குவரத்து காவல் அதிகாரியின் அராஜகத்தினால் கர்ப்பிணி பெண் உஷா மரணமடைந்து.... அவரது உடலை அடக்கம் செய்வதற்குள் அடுத்த உயிர்பலி.... அஸ்வினி.... சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படிக்கும் மாணவி அஸ்வினியை, அழகேசன் என்ற 28 வயது இளைஞர், பட்டப்பகலில் கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்....
பெண்ணின் சமத்துவத்திற்காகவும், பெண்ணின் மேன்மைக்காகவும், ஒரு பக்கம் நாம் போராடிக் கொண்டிருக்கும்போது இன்னொருபுறம் பெண்களில் ஒரு பகுதியினரின் வளர்ச்சியும் எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தினையடுத்து, சக மாணவிகள் அல்லது ஒத்த வயதுடைய பிற மாணவிகளின் மனநிலைமை என்னவாக இருக்கும்? பெண் பிள்ளைகளை வீட்டிலிருந்தோ அல்லது வெளியூர்களிலிருந்து தங்கி படிக்க அனுப்பி வைக்கும் பெற்றோர்களின் மனநிலைமை என்னவாக இருக்கும்? அவர்களுக்கு ஈரக்குலையே நடுங்காதா? பெண் பிள்ளைகள் படித்து முடித்து வீடு திரும்புவதற்குள் அவர்களால் நிம்மதி பெருமூச்சு விட முடியுமா?
முதலில் இளம்பெண்கள்.... ஒருவனை விரும்ப ஆரம்பிப்பதற்குமுன்.... இரு குடும்பத்தின் சூழல்கள்... இருவரது குணநலன்கள் மற்றும் சமுதாய அமைப்புகள்... இதையெல்லாம் யோசித்தாலே இத்தகைய விபரீதங்கள் பாதி குறையும். மாணவி அஸ்வினி விவகாரமும் அப்படித்தான்... தான் வேண்டாம் என மறுத்தும் அழகேசனை வற்புறுத்தி காதலிக்க வைத்ததாகவும், இறுதியில் அஸ்வினி தன் அம்மாவின் பேச்சினை கேட்டு.... காதலை நிராகரித்ததாகவும் அழகேசன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அஸ்வினிக்கு தந்தை இல்லாததால்.... தண்ணீர் கேன் போடும் வேலை பார்த்து அவரது படிப்பு செலவுகளை ஏற்றதாகவும் அழகேசன் தெரிவித்துள்ளார். ஆனால் அழகேசனை உண்மையிலேயே காதலித்த அஸ்வினி, ஒரு கட்டத்தில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாமல், இறுதியில் அழகேசனை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். விளைவு... அன்பு - ஆத்திரமாகி... ஆத்திரம் - கொலையாகி முடிந்திருக்கிறது... ஒரு பெண்ணுக்கு தன்னுடைய விருப்பத்தையும், கருத்தையும் தெரிவிக்க உரிமையுண்டு. அதை மறுப்பதற்கில்லை. ஆனால் எப்போது அதை தெரிவிக்கிறாள் என்பது முக்கியம்... அதற்காக அவளது உயிரையே கொல்வது உச்சக்கட்ட கொடூரம்... காதலை திணித்து... அதை ஏற்றுக்கொள்ள மிரட்டுவது எந்த வகையில் நியாயம்?
இது என்ன வகை காதல்
பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய வன்முறைக்கெல்லாம் ஒருதலைக்காதல் என்று பெயர் சூட்டுவதை முதலில் நிறுத்த வேண்டும்... இது ஒரு வகையான வற்புறுத்தல்... கட்டாயப்படுத்துதலின் உச்சக்கட்டம்... பக்குவமற்ற செயல்களின் வெளிப்பாடு... காதல் துரோகத்தை ஒழுங்காக கையாள முடியாதவர்கள், ஒற்றை சக்கர வண்டி ஊர் போய் சேராது என்பதை முதலில் உணர வேண்டும்... காதல் என்பது வெறும் மகிழ்ச்சியை மட்டும் தராது... வெறும் அன்பை மட்டும் தராது... வெறும் இன்பத்தை மட்டும் தராது... விரக்தியை தராது... தற்கொலை எண்ணத்தை தராது... கொலை செய்யும் வெறியை தராது... உண்மையான காதல்... வாழ்க்கையை பண்படுத்தும். அதன் பாதையை நெறிப்படுத்தும். இதயத்தின் காயங்களை இதமாக வருடிக் கொடுக்கும்... லட்சியத்தை உறுதிப்படுத்தும்... அனைவரையும் நேசிக்கும் தன்மையாக பூத்துக்குலுங்கும்... ரத்தமாகவும், வியர்வையாகவும் தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும் தியாகியாகவும் வளர்த்தெடுக்கும்.... என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
இனியும் நீளக் கூடாது இப்பட்டியல்
அன்று ஸ்வாதி... தொடங்கி.... சித்ரா...தேவி... அஸ்வினி.... என இந்த பட்டியல் இனியும் நீளக்கூடாது... இதற்கெல்லாம் யாரை குற்றம் சொல்வது? சதி, சூழ்ச்சி, வன்மம், காமம், சுயநலம், அதற்காக எதையும் செய்யும் கொடூரம் போன்றவற்றை தூபம் போட்டு வளர்த்து இதயத்தில் தூங்கி கொண்டிருக்கும் மிருகத்தை தட்டி எழுப்பும் தொலைக்காட்சி தொடர்களையா? ஒருவரின் வயதையோ, பதவியையோ கருதாமல் தோற்றத்தை மட்டுமே மையமாக கொண்டு, கேலி, கிண்டல் செய்யும் வாட்ஸ்அப் மற்றும் அவமானப்படுத்தும் வார்த்தைகளுடன் கூடிய கமெண்டுகள் பயன்படுத்தப்படும் தளமான இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களா?
அனைவரும் பொறுப்பு
அன்பு, கருணை, சேவை, தியாகம், அர்ப்பணிப்பு போன்றவற்றை வழியனுப்பி வைத்துவிட்டு, லஞ்ச லாவண்யம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வன்முறை பழிவாங்கல், மக்களை சிந்திக்கவிடாமல்.. அவர்களை திசைதிருப்பி... அறிவுபூர்வமாக வளரவிடாமல் செய்கிற சூழ்ச்சி போன்றவற்றை அரங்கேற்றி கொண்டிருக்கிற அரசியல்வாதிகளையா? உயிரியல், தாவரவியல், புள்ளியியல், பொருளியல் என்று வெறும் அறிவுபூர்வமான கல்வியை மட்டுமே கற்பித்து மனப்பாடத்தின் மூலம் மதிப்பெண்களைப் பெற வைத்து மனிதாபிமானத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு வெறும் பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் ஆசிரியர்களையா? யார் காரணம்? எல்லோருமே காரணம்தான். எல்லோருமே இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள்தான்...
சமூக வலைதளங்களால் பாதிப்பு
கொடுமைகளுக்கு எதிரான தொண்டு நிறுவனமான ' டிச் தி லேபிள் ' அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை அதிக பதட்டம் உடையவர்களாக மாற்றுவதாக தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நிகராக பெற்றோர்களும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக உள்ளதால், இது தங்களுடைய வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து அவர்கள் யோசிக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. காதல் தோல்வி, ஒருதலைக்காதல், காதல் துரோகம் போன்றவற்றினால் நடைபெறும் விசித்திர வெறியாட்டத்துக்கு முடிவுகட்ட வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்...
சித்தரிப்பதை நிறுத்தங்கள்
- உடனடியாக, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இத்தகைய குற்றங்கள் களையப்பட தனித்துறையும், தனி சட்டப்பிரிவும் ஏற்படுத்த வேண்டும்.... அதற்கு பெற்றோர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். அத்துடன், ஆண், பெண் இனக்கவர்ச்சி குறித்த தவறான புரிதலை போக்க முயல வேண்டும்.
- சிறந்த ஆளுமைக்கான பண்புகள், மனவெழுச்சியைக் கட்டுப்படுத்துதல் முதலானவற்றைத் தரக்கூடிய பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். வாழ்விலும், பின்னர் இல்லற வாழ்விலும் அவனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பயன்படும்படியான அறநெறிக் கருத்துக்கள் பின்பற்றக்கூடிய வகையிலான பாடத்திட்டங்கள் தீட்டப்படவேண்டும்..
- திரைப்படங்களில், கதாநாயகி தன்னை காதலிக்க வைப்பதற்காக கதாநாயகன் செய்யும் பாலியல் அத்துமீறல்களும், அநாகரீக செயல்களும் முதலில் தடுக்கப்பட வேண்டும்... பெண்களின் உணர்வுகளை மலிவாக திரித்தும், மிகைப்படுத்தியும் சித்தரிக்கப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும்...
மன வள பயிற்சி
- பெண்கள் நடமாடும் பகுதிகளில் சீருடை அணியாத காவலர்களை சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்... பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனையை தீவிரப்படுத்த வேண்டும்...
- பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு மனவள ஆய்வு பயிற்சி தரவேண்டும்... அதற்கு ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகளை உருவாக்க அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்... இந்த அவலநிலையை அவசர கதியோடு மாற்றாமல் போனால்... மனித நேய விதையை மனசுக்குள் ஊன்றாமல் போனால் நாடும் நகரமும் மட்டுமல்ல... நமது சொந்த வீடும் குடும்பமுமே நாசமாகிவிடும்... என்பது உண்மை.