ஓபிஎஸ் தரப்பில் இருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை: தீபா விளக்கம்
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த யாரும் தம்மை தொடர்பு கொள்ளவில்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து தம்மை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வரானார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் சசிகலாவோ அதிமுக பொதுச்செயலர் பதவியை கைப்பற்றியதுடன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து அந்த நாற்காலியில் அமர முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில் தாம் சசிகலாவால் மிரட்டப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிரடியாக பேட்டியளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் நேற்று ஜெயலலிதா நினைவிடத்துக்கு திடீரென சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அங்கேயே செய்தியாளர்களை சந்தித்து சசிகலாவுக்கு எதிராக கலகக் குரலை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தம்முடன் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அழைத்து விடுத்துள்ளதை ஊடகங்களில்தான் பார்த்தேன். அவர்கள் தரப்பில் இருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
பிப்ரவரி 24-ந் தேதி என்னுடைய முடிவை அறிவிப்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.