மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்கள் முடக்கம்! தென்மாவட்ட ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்!!
ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் புரட்சியாளர்கள் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் ரயில்களை முடக்கி வைத்தனர். இதனால் தென்மாவட்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.
மதுரை: தமிழின பண்பாடாம் ஜல்லிகட்டு உரிமையை மீட்க களம் கண்டிருக்கும் புரட்சியாளர்கள் வசம் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்கள் போனதால் தென்மாவட்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து சென்ற ரயில்கள் திண்டுக்கல்லுக்கு செல்லாமல் மாற்றுப் பாதையிலும் தென்மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் மதுரைக்குள் செல்லாமல் மாற்றுப் பாதையிலும் இயக்கப்படுகின்றன.
அலங்காநல்லூரில் தொடங்கிய தமிழின பண்பாட்டு உரிமை புரட்சி சென்னை மெரினாவில் வலுவாக மையம் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து நகரங்களும் போர்க்களமாகிவிட்டன.
எரிகிற நெருப்பில் எண்ணெய்...
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கிடையாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து அமைதி அறவழிப் போராட்டம் என்பது மத்திய அரசுக்கு எதிரான தீவிரமானது.
ரயில் மறியலாக வெடித்தது
மத்திய அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் ரயில் மறியல் போராட்டமாக வெடித்தது. மதுரையில் வைகை ஆற்றில் கோவையில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயிலை மறித்து பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்தனர். மதுரை ரயில் நிலையத்துக்குள் எந்த திசையில் இருந்தும் ரயில்கள் நுழைய முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
பாண்டியன் ரத்து
இதனால் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய பாண்டியன் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக ரயில்கள் இயக்கப்படாமல் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.
திண்டுக்கல்லில் நிறுத்தம்
இதேபோல் சென்னையில் இருந்து மதுரை நோக்கி செல்ல வேண்டிய ரயில்களை புரட்சியாளர்கள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மறித்தனர். இதனால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரைக்கு செல்லாமல் திண்டுக்கல்லுடன் ரத்து செய்யப்பட்டது. குருவாயூர் ரயிலும் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது.
எந்தெந்த ரயில்கள்...
திருநெல்வேலி- திருச்சி பாசஞ்சர் ரயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் ரயில் விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. விருதுநகர்- மதுரை இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை- செங்கோட்டை பாசஞ்சர் ரயில், மதுரைக்குப் பதிலாக விருதுநகரில் இருந்து புறப்படும்.
மத்திய அரசுக்கு பாடம்
வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் திண்டுக்கல்லில் தத்தளித்து வருகின்றனர். இப்புரட்சியால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் திண்டுக்கல் வழியாக இயக்காமல் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. தமிழர்களின் இந்த புரட்சியால் மத்திய அரசுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது.