ஒரு உயிர் போன பிறகு... மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகைகள் அறிவித்த ஜெ.: போராட்டம் வாபஸ்
சென்னை: தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடி வரும் மாற்றுத்திறனாளிகளுக்காக சில முக்கிய சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். ஜெயலலிதாவின் அறிவிப்பினைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்த உடன் முதல்வர் ஜெயலலிதா விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஆற்றிய உரை:
மாற்றுத் திறனாளிகளை சமுதாயத்தில் ஓர் அங்கமாக அனைவரும் ஏற்பதற்கும், வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழு பங்கேற்பை உறுதி செய்வதற்கும் வகை செய்யும் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத் திறனாளிகள் மேலும் சில சலுகைகள் கேட்டு அரசுக்கு கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் தற்போது சில சலுகைகளை அறிவிக்க விரும்புகிறேன்.
மாதாந்திர உதவித் தொகை
தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கு குறைபாட்டின் அளவு 60 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 40 சதவீதம் என குறைக்கப்படும். இதனால், 40 சதவீதம் குறைபாடு உள்ள மாற்று திறனாளிகளும் ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித் தொகை பெற இயலும்.
ஆதரவற்றவர்கள்
மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகள் ஆதரவற்றோர் என்ற நிலையில் இருக்க வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. எவ்வித வருவாய் இல்லாதவராகவும், 50,000 ரூபாய்க்கு அதிகமான சொத்துகள் இல்லாதவராகவும், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட மகன், மகனின் மகன் அதாவது பேரன், கணவர் அல்லது மனைவி இல்லாதவரே ஆதரவற்றோர் என வரையறுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளை பொறுத்தவரை ஆதரவற்றோராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படும். அதாவது, வேலை வாய்ப்பற்ற 40 சதவீதத்திற்கு மேல் குறைபாடுள்ள, மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவர்.
அரசுப்பணியில் இட ஒதுக்கீடு
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும். இந்த இட ஓதுக்கீட்டை அரசு தவறாமல் கடைபிடித்து வருகிறது. எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், இதுவரை 5,633 மாற்றுத் திறனாளிகள் அரசு மற்றும் அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீடு முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தலைமைச் செயலாளர் தலைமையில் உள்ள உயர்மட்டக் குழு கண்காணித்து வருகிறது.
மாநில ஒருங்கிணைப்புக்குழு
மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்களை கண்காணிக்கவும், அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கவும் சமூக நலத்துறை அமைச்சரை தலைவராகக் கொண்ட மாநில ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்படும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளி ஏற்றும் என தமிழக அரசு திடமாக நம்புகிறது என்று தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளி மரணம்
பல்வேறு சலுகைகள் கோரி கடந்த சில நாட்களாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் சிறை வைக்கப்பட்டனர். அவர்களில் காட்பாடி குப்புசாமி என்ற மாற்றுத்திறனாளி இருதினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். மாற்றுத்திறனாளியின் போராட்டத்திற்கு செவி சாய்க்காத அரசைக் கண்டித்து எதிர்கட்சியினர் அறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில் சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று சில சலுகைகளை அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
போராட்டம் வாபஸ்
மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை கண்டறிந்து தீர்வு காண, சமூகநலவாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் வெ ளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பை இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்திருந்தால் ஒரு மாற்றுத்திறனாளியின் மரணத்தை தவிர்த்திருக்கலாமே?