ஏற்காடு தொகுதியில் இன்று ஜெயலலிதா அனல் பறக்கும் பிரச்சாரம்
சேலம்: இடைத்தேர்தலையொட்டி முதல்வர் ஜெயலலிதா இன்று ஏற்காட்டில் பிரச்சாரம் செய்கிறார்.
ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரோஜாவை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று பிரச்சாரம் செய்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலத்திற்கு பகல் 11 மணிக்கு வருகிறார்.
சேலத்தில் இருந்து அவர் வேனில் மின்னாம்பள்ளி, வெள்ளாளகுண்டம் பிரிவு, வாழப்பாடி, பேளூர், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, வலசையூர், அயோத்தியாப்பட்டணம், உடையாப்பட்டி ஆகிய 9 இடங்களில் சூறாவளி பிரச்சாரம் செய்கிறார்.
அதிமுகவின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்யும் அவர் மாலை 4 மணிக்கு சென்னைக்கு திரும்புகிறார். ஜெயலலிதாவின் வருகையையொட்டி ஏற்காடு தொகுயில் 500 போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஜெயலலிதா செல்லும் வழியில் அவரை சந்தித்து விவசாயிகள் யாரும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து பிரச்சனை செய்யலாம் என்று சந்தேகிக்ககப்படுகிறது. இதனால் சந்தேக்கித்திற்குரிய விவசாயிகளை உளவுத் துறை கண்காணித்து வருகிறது.
முன்னதாக ஜெயலலிதா செல்லும் இடங்களை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் குழு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.