மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - ஜெ.
சென்னை: பழவேற்காட்டில் மீன் பிடிக்கும் விவகாரத்தில் தமிழக மீனவர்களைத் தாக்கிய ஆந்திர மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளனர்.
மாங்கோடு, சின்னமாங்கோடு ஆகிய தமிழக கிராமங்கள் மீது 400 படகுகளில் வந்த 3 ஆயிரம் ஆந்திர மீனவர்கள் தாக்கினர். அங்கு பணியில் இருந்த தமிழக போலீசாரை ஈட்டியால் அவர்கள் குத்தினர்.
இதைத் தொடர்ந்து ஆந்திர மீனவர்கள் சங்கத்தை சேர்ந்த குப்பன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மீனவ கிராம பெண்கள் மற்றும் குழந்தைகள் வயல்வெளியில் தங்கியுள்ளனர்.
அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், இதாக்குதலில் 60 வீடுகள் மற்றும் 48 படகுகள் சேதம் அடைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.