ஜெ.வின் தேர்தல் சரித்திரத்தில் முதல் முறையாக 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சி.மகேந்திரனை விட 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது சரித்திர சாதனையாகும்.
1989ம் ஆண்டு முதல் 2011 வரை வெளிமாவட்டங்களில் போட்டியிட்ட ஜெயலலிதா, முதல் முறையாக தலைநகர் சென்னையில் உள்ள ஆர்.கே.நகரில் போட்டியிட்டார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரே ஒரு நாள் மட்டுமே அதுவும் சில மணிநேரங்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. ஆனால் அமைச்சர்கள் 28 பேர், 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 ராஜ்யசபா உறுப்பினர்கள், 10,000த்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் களமிறங்கினர். பாடுபட்டதற்கு பலனில்லாமல் இல்லை. சரித்திர சாதனை வெற்றியை பெற்றுத்தந்துள்ளனர் தங்களின் தலைவிக்கு.
ஜெயலலிதா இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில் வென்ற வாக்குகள் எதிர்கட்சிகளை விட பெற்ற வாக்கு வித்தியாசங்களை தெரிந்து கொள்வோம்.
போடியில் முதல் வெற்றி
1989 ம் ஆண்டு அண்ணா தி.மு.க. இரண்டாக பிளவுபட்ட போது தென் தமிழகத்தின் போடிநாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். அத்தொகுதியில் ஜெயலலிதா 57,603 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் முத்து மனோகரன் 28,872 வாக்குகளையும் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் 28,731.
பர்கூர் - காங்கேயம்
1991ம் ஆண்டு எல்லை பகுதியான பர்கூர் மற்றும் மேற்கு பகுதியான ஈரோடு மாவட்டத்தின் காங்கேயம் தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்டார். பர்கூரில் ஜெயலலிதா 67,680 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக முன்னேற்றக் கழகத்தின் டி.ராஜேந்தர் 30,465 வாக்குகளையும் பெற்றார். வாக்கு வித்தியாசம் 37,215.
காங்கேயத்தில் ராஜினாமா
காங்கேயம் தொகுதியில் ஜெயலலிதா 69,050 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் ராஜ்குமார் மன்றாடியார் 35,759 வாக்குகளையும் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் 33,291. எனினும் காங்கேயம் தொகுதியை ராஜினாமா செய்தார் ஜெயலலிதா.
பர்கூரில் தோல்வி
1996ம் ஆண்டு மீண்டும் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தி.மு.க.வின் சுகவனம் 59,418 வாக்குகளை பெற்று வென்றார். ஜெயலலிதா 50,782 வாக்குகளை பெற்று 8,639 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
2001 ல் வேட்புமனுக்கள் தள்ளுபடி
2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாலும் ஜெயலலிதாவின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
ஆண்டிபட்டியில் வெற்றி
ஆண்டிபட்டி 2002ம் ஆண்டு தென்மாவட்டத்தின் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ஜெயலலிதா. இத்தேர்தலில் ஜெயலலிதா 78.437 வாக்குகளையும், தி.மு.க.வின் வைகை சேகர் 37,236 வாக்குகளையும் பெற்றார். வாக்கு வித்தியாசம் 41,201.
2006ல் மீண்டும் ஆண்டிபட்டி
2006ம் ஆண்டு மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 73,927 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் தி.மு.க.வின் சீமான் பெற்ற வாக்குகள் 48,741 வாக்குகள். வாக்கு வித்தியாசம் 25,186.
ஸ்ரீரங்கத்து நாயகி
2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு, 1,05,328 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் ஆனந்த் 63,480 வாக்குகளைத்தான் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் 41,848.
ஆர்.கே.நகரில் சாதனை வெற்றி
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழந்த ஜெயலலிதா, கர்நாடகா உயர்நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுதலை செய்ததை அடுத்து கடந்த மே மாதம் 23ம் தேதி 5வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா. இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா பெற்ற வாக்குகள் 1,60,432. அவரை எதிர்த்து போட்டியிட்ட சி.மகேந்திரன் பெற்ற வாக்குகள் 9,710. ஜெயலலிதா 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளார்.
ஆர்.கே.நகரில் சாதனை வெற்றி
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழந்த ஜெயலலிதா, கர்நாடகா உயர்நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுதலை செய்ததை அடுத்து கடந்த மே மாதம் 23ம் தேதி 5வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா. இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா பெற்ற வாக்குகள் 1,60,432. அவரை எதிர்த்து போட்டியிட்ட சி.மகேந்திரன் பெற்ற வாக்குகள் 9,710. ஜெயலலிதா 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளார்.