ஜெ. மர்ம மரணம்... ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவுக்கு எதிராக விவேக் வாக்குமூலம்?
ஜெயலலிதா மரண விவகாரத்தில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவுக்கு எதிராக இளவரசி மகன் விவேக் வாக்குமூலம் தரக்கூடும் என கூறப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா மர்ம மரண விவகாரத்தில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவுக்கு எதிராக இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா வாக்குமூலம் தரக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இளவரசி குடும்பத்தை முன்வைத்து புதிய ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் நீதியரசர் ஆறுமுகசாமி. ' சொத்து விவகாரத்தில் இரண்டு தரப்புக்குமே பூசல் வெடித்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தையும் இந்தப் பூசல்தான் வெளிக்கொண்டு வர இருக்கிறது' என்கின்றனர் ஆளும்கட்சி வட்டாரத்தில்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் தொடங்கிய நாள்களில் இருந்தே, இளவரசி குடும்பத்தோடு முரண்பட்டார் தினகரன். ' கைச்செலவுக்குப் பணம் தருவதில்லை; அந்தக் குடும்பத்துக்கு ஆட்களுக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது; மொத்த அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறார் விவேக்; சின்னப் பையனுக்கு விவரம் போதவில்லை; ஜெயா டி.வியில் துரைமுருகனை அழைத்துப் பேச வைக்கிறார்' - இதெல்லாம் சசிகலாவிடம் தினகரன் கூறிய வார்த்தைகள். இதற்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான விவகாரம். இந்த விவகாரத்தின்போது, ஒடிஷாவில் இருந்த விவேக், அம்மா வீடியோவை வெளியிட்டு அரசியல் தேடலாமா என நண்பர்களிடம் கொந்தளித்தார். அவருடைய சகோதரி கிருஷ்ணபிரியாவோ, ' தினகரனின் வெட்கக்கேடான செயல்' என ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர், அடுத்த சில நிமிடங்களில், 'தினகரன் உடன் இருக்கும் வெற்றிவேலின் வெட்கக்கேடான செயல்' என மாற்றிப் பதிவிட்டார். தினகரனும், கிருஷ்ணபிரியாவிடம் இருந்து நான் வீடியோவை வாங்கவில்லை. விவேக்கிடம் இருந்துதான் வாங்கினேன் எனக் கூறினார். வெற்றிவேல் வெளியிடுவார் என எனக்குத் தெரியவில்லை எனப் பல்டி அடித்தார்.
நடராஜன்- பிரியா மோதல்
கிருஷ்ணபிரியாவின் பதிலடிகளால் கொந்தளித்த நடராஜனும், ' அவரை அடிப்பேன்' எனக் கூறினார். இதற்குப் பதில் சொன்ன கிருஷ்ணபிரியாவும், ' அந்தப் பெரியவர், முயல முற்படட்டும் முதலில்' எனக் கூறினார். " இந்த வார்த்தைப் போர்கள்தான், இப்போது வீதிக்கு வந்துவிட்டன" என விவரித்த டெல்டா மாவட்ட சொந்தங்கள், " எந்தக் காலத்திலும் இளவரசி குடும்பத்தோடு சசிகலா சொந்தங்கள் ஒத்துப் போனதே இல்லை. 2011-ல் கார்டனை விட்டு சசிகலா விரட்டப்பட்டபோது, இளவரசி கார்டனிலேயே தங்கிவிட்டார்.
அதிமுகவும் இளவரசி குடும்பமும்
இந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதாவின் அபிமானத்தையும் பெற்றுவிட்டார் இளவரசி. மீண்டும் கார்டன் அதிகாரத்துக்குள் சசிகலா வந்தபோது, இளவரசி குடும்பத்துக்கு பெரிதாக எந்த மரியாதையும் அளிக்கவில்லை. மிடாஸ் உள்பட கார்டன் சொத்துக்களில் பெரும்பாலானவற்றை இளவரசியின் உறவுகள்தான் கவனித்து வருகின்றனர். அவர்களிடம் அ.தி.மு.கவின் அமைச்சர்கள் சிலரும் தொடர்பில் உள்ளனர்.
அரசியலுக்கு வரும் விவேக்
'அரசியல் அதிகாரத்துக்குள் கோலோச்ச வேண்டும்' என விரும்புகிறார் விவேக். திகார் சிறையில் இருந்தபோது, தினகரனுக்கான கூட்டங்களை முன்னெடுத்தார். அப்போது அவர் கூட்டிய கூட்டத்தைப் பார்த்து அமைச்சர்களே அதிர்ந்தனர். இப்போது, மீண்டும் லைம் லைட்டுக்கு வர ஆசைப்படுகிறார் விவேக். இதைப் பற்றிய பேசும் விவேக் ஆதரவாளர்கள், ' ஜெயலலிதாவால் மிகுந்த பாசத்தோடு வளர்க்கப்பட்டவர் விவேக். போயஸ் கார்டன் முகவரியில்தான் அவருக்கு ரேஷன் அட்டை இருக்கிறது. ஜெயலலிதாவின் நேரடி வாரிசாகத்தான் அவரைத் தொண்டர்கள் பார்க்கின்றனர். சசிகலா குடும்பத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு, விவேக் வந்தால் அவரை ஓ.பி.எஸ்,எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கட்சியிலும் நல்ல பதவியைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.
சசிகலாவால் எல்லாம்
' சசிகலா, தினகரன் தலையீடு இருக்கக் கூடாது' என்பதுதான் சீனியர் அமைச்சர்களின் ஒரே நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்பாக, ஆறுமுகசாமி ஆணைய விசாரணையைப் பார்க்கிறார்கள். சிறையில் இருக்கும் இளவரசியும், ' சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டதுக்கான தண்டனையை அனுபவிக்கிறேன். பேரப் பிள்ளைகளைக் கொஞ்சக் கூட முடியவில்லை' என சீறிக் கொண்டிருக்கிறார். தங்களுக்கு எதிராக இளவரசி குடும்பம் செல்லலாம் என்பதை உணர்ந்து, விவேக்கிடம் சமரசப் பேச்சுக்கு இறங்கி வந்தார் சசிகலா" என்கின்றனர்.
ஆறுமுகசாமி ஆணையத்தில் விவேக் வாக்குமூலம்?
சசிகலா, தினகரன் மீது கடும் கோபத்தில் இருக்கிறது இளவரசி குடும்பம். தொழில்ரீதியாக அனைத்தும் நல்லபடியாக நடக்க வேண்டும் என விரும்புகிறார் விவேக். ஆட்சியைப் பகைத்துக் கொண்டால், தொழில் கெட்டுவிடும் என்பதை உணர்ந்து அமைதியாக இருக்கிறார். தினகரனின் நெருக்கமான வளையத்துக்குள்ளும் விவேக் இல்லை. இந்த விவகாரங்களை தங்களுக்குச் சாதகமாகப் பார்க்கின்றனர் ஆட்சியில் உள்ளவர்கள். சசிகலாவுக்கு எதிராக விவேக் கொடுக்கப் போகும் வாக்குமூலத்தை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கிறார்கள்" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்.