பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அண்ணா விருதை ஜெயலலிதாவே நேரில் வழங்க திடீர் முடிவு!
சென்னை: தேமுதிகவில் இருந்து வெளியேறிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் அண்ணா விருதை முதல்வர் ஜெயலலிதாவே வழங்குவார் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழுக்கு தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப்பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றிட தகுதியான பெருமக்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று முன் தினம் அறிவித்தார்.
இதன்படி, திருவள்ளுவர் விருது-கவிஞர் யூசி (தைவான்)-க்கும்; தந்தை பெரியார் விருது -சுலோச்சனா சம்பத்; அண்ணல் அம்பேத்கர் விருது -பேராயர் எம்.பிரகாஷ்; பேரறிஞர் அண்ணா விருது -பண்ருட்டி ச.ராமச்சந்திரன்; பெருந்தலைவர் காமராசர் விருது -கி.அய்யாறு வாண்டையார்;
மகாகவி பாரதியார் விருது -கு.ஞானசம்பந்தன்; பாவேந்தர் பாரதிதாசன் விருது -ராதா செல்லப்பன்; தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது -அசோகமித்ரன்; முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது- வ. ஜெயதேவன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
தேமுதிகவில் இருந்து வெளியேறிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசு அண்ணா விருதை அறிவித்தது அரசியலில் இருந்து பரபரப்பை ஏற்படுத்தியது. பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவுக்கு இழுக்கும் முயற்சியாகவும் இது கூறப்பட்டது.
இந்த விருதுகளை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் விழாவில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வழங்குவதாக இருந்தது. ஆனால் தற்போது திடீரென வரும் 26-ந் தேதி குடியரசு தினத்தன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவே நேரில் விருதுகளை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது அரசியல் அரங்கில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.