6 ஆண்டாக கடிதம் மட்டுமே எழுதும் ஜெயலலிதா பிரதமரை சந்திக்க வேண்டும் - ஸ்டாலின்
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக பிரதமரை ஜெயலலிதா சந்திக்க முயற்சி செய்தால் திமுக முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். காவிரி பிரச்சினை தொடர்பான 6 ஆண்டாக பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் மட்டுமே எழுதி வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து வன்முறையில் இறங்கிய கன்னடர்கள் தமிழர்களை தாக்கினர். தமிழக வாகனங்களையும் அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. ஏராளமான தமிழர்களும் தாக்குதலில் காயமடைந்தனர். இந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை எழும்பூரில் திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. எழும்பூர் ரயில் மறியலில் சென்னை திமுக சட்டசபை உறுப்பினர்கள் உட்பட 5000 பேர் பங்கேற்றனர். அப்போது கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோஷமிட்டனர். ரயில் மறியல் நடத்தச் சென்ற போது போலீஸ் தடுத்ததால் ஸ்டாலின் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக பிரதமரை ஜெயலலிதா சந்திக்க முயற்சி செய்தால் திமுக முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். காவிரி பிரச்சினை தொடர்பான 6 ஆண்டாக பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் மட்டுமே எழுதி வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். திமுக, விவசாயிகளின் ஒருங்கிணைந்த போராட்டம் காரணமாகவே முதல்வர் நீதிமன்றம் சென்றதாக ஸ்டாலின் தெரிவித்தார். இதனையடுத்து ஸ்டாலினையும், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரையும் போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.
திருச்சியில் சாலை மறியல் நடத்திய திமுக செயலர் கே.என்.நேரு தலைமையில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். இதே போல வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.