ஜெ., ஆலோசனைப்படி அவரது துறைகள் ஒபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்ட நாள் இன்று - பிளாஷ் பேக்
கடந்த ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதியன்றுதான் இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டார்.
சென்னை: உடல் நலக்குறைவினால் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர் வகித்து வந்த துறைகள் அனைத்தும் கடந்த ஆண்டு இதே நாளில் அப்போது நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
காவல்துறை உள்ளிட்ட அனைத்து இலாகாக்களும் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டது.
நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பரிசோதிக்க, அக்டோபர் 5ஆம் தேதி, 3 மருத்துவர்கள் வந்தனர். அவர்களில் டாக்டர் கில்நானி நுரையீரல் சிறப்பு மருத்துவர். டாக்டர் அஞ்சன் டிரிக்கா மயக்கவியல் துறை சிறப்பு நிபுணர். டாக்டர் நிதிஷ்நாயக், இதயநோய் சிறப்பு மருத்துவர். இத்தனை டாக்டர்களின் வருகைக்குப் பிறகே ஜெயலலிதாவின் உடல்நிலை அபாயகட்டத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
செயற்கை சுவாசத்தில் ஜெயலலிதா
அக்டோபர் 6ஆம் தேதி, அப்போலோ மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் பிரச்னை, செயற்கை சுவாசம் அளிக்கப்படுவது, நோய்த் தொற்றுப் பிரச்னைகள் இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருந்தன. பாசிவ் பிசியோதேரபி அளிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது.
அப்பல்லோ அறிக்கை
ராகுல்காந்தி, வெங்கையாநாயுடு, மு.க. ஸ்டாலின் என வரிசையாக அப்பல்லோவிற்கு வந்து ஜெயலலிதாவின் உடல் நலன் பற்றி விசாரித்து சென்றனர். அக்டோபர் 10ஆம் தேதி மீண்டும் அறிக்கை வெளியிட்டது அப்பல்லோ.
ஆளுநர் மாளிகைக்கு சென்று அப்போதய ஆளுநர் வித்யாசாகர் ராவை, ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் சந்தித்து பேசினர்.
ஜெ., இலாகாக்கள் ஒபிஎஸ் வசம்
இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் இருந்து மிக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 166 (3) பிரிவின் படி, முதல்வர் ஜெயலலிதா இதுவரை வகித்து வந்த அனைத்து இலாகாக்களையும், நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மாற்றி ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார் என்று அந்த அறிக்கை கூறியது.
முதல்வராக நீடித்த ஜெ.,
நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் தலைமை வகிப்பார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தனது பணிகளுக்குத் திரும்பும் வரை இது நீடிக்கும். முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
முதல்வராக டிச.5ல் மரணம்
ஜெயலலிதா நலமாக இருக்கிறார் விரும்பும் போது வீடு திரும்புவார் என்றெல்லாம் அப்பல்லோ நிர்வாகம் கூறியது. ஆனால் டிசம்பர் 5ஆம் தேதி இரவு ஜெயலலிதா மரணமடைந்தார். அவர் முதல்வராகவே மரணமடைந்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.