மருத்துவமனையில் நீண்ட நாள் தங்க வேண்டும் ஜெயலலிதா.. அப்பல்லோ அறிக்கை
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், முதல்வர் ஜெயலலிதா நீண்ட நாள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும் என்றும் அப்பல்லோ கூறியிருப்பதால் அதிமுகவினரிடையே கவலை அதிகரித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 15 நாட்களாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. இதுவரை வெளியானதிலேயே இதுதான் மிக விரிவான அறிக்கையாகும்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
தேவையான ஆன்டிபயாடிக் மருந்துகள், செயற்கை சுவாச உதவி, பிற தொடர்பான சிகிச்சை முறைகள் அவருக்கு தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதய நோய் நிபுணர்கள், சுவாச நிபுணர்கள், தொற்று நோய் சிகிச்சை சிறப்பு நிபுணர்கள், சர்க்கரை வியாதிக்கான நிபுணர்கள், அவசர சிகிச்சை நிபுணர்கள், ஆய்வக மற்றும் ரேடியாலஜி நிபுணர்கள் என அனைத்துத் தரப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் முதல்வர் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் கில்னானி, அஞ்சான் டிரிக்கா, நிதீஷ் நாயக் ஆகியோர் அடங்கிய குழு 5.10.2016 அன்று சிகிச்சை முறைகள் குறித்து விரிவான விவாதம் மேற்கொண்டது. அவர்களுடன் அப்பல்லோ மருத்துவர் குழுவும் கலந்து ஆலோசித்தது.
முதல்வர் ஜெயலலிதாவையும் எய்ம்ஸ் மருத்துவர் குழு ஆராய்ந்தது. தற்போது முதல்வருக்கு கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சையைத் தொடரவும் அது ஆலோசனை வழங்கியது. 7ம் தேதி வரை எய்ம்ஸ் மருத்துவக் குழு அப்பல்லோவில் இருப்பார்கள்.
சர்வதேச சிறப்பு மருத்துவரும், மருத்துவ ஆலோசகருமான டாக்டர் ரிச்சர்ட் ஜான் பியல், இன்று மீண்டும் முதல்வர் ஜெயலலிதாவிடம் பரிசோதனை மேற்கொண்டார். ஏற்கனவே இவர் கடந்த 30ம் தேதி ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
இதுவரை நடந்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகளின் அடிப்படையில், முதல்வருக்கு விரிவான சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை வகுத்துள்ளது. மேலும் முதல்வருக்கு உள்ள சர்க்கரை வியாதி மற்றும் குளிர்கால மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு சிகிச்சைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தற்போது முதல்வருக்கு செயற்கை சுவாச உதவி, நெபுலைசேஷன்,நுரையீரல் இறுக்கத்தைக் குறைக்கும் மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊட்டச்சத்து உணவு, சப்போர்ட்டிவ் தெரப்பி ஆகியவை தொடரும்.
தற்போது கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சையை தொடர வேண்டும் என்பதே அனைத்து மருத்துவ நிபுணர்களும் நடத்திய ஆலோசனையின் இறுதியில் எடுக்கப்பட்ட முடிவாகும். மேலும் சிகிச்சை தொடர்பாக முதல்வர் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க நேரிடும் என்று அப்பல்லோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.