மத்தியில் காங்கிரஸ் அரசை அகற்றுங்கள்... சிதம்பரத்தில் ஜெயலலிதா
சிதம்பரம்: மத்தியில் காங்கிரஸ் அரசை அகற்றி மக்கள் நல ஆட்சி அமைய வேண்டும் என சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.
வரும் லோக்சபா தேர்தல் நாட்டின் தலைவிதியை மாற்றக்கூடிய தேர்தல் என்ற அவர், தேர்தலில் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து பேசிய அவர், மத்தியில் காங்கிரஸ் அரசை அகற்றி மக்கள் நல ஆட்சியை அமைக்க வேண்டும் என்றார்.
தேர்தலில் குடும்ப ஆட்சிக்கும், ஊழல் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஜெயலலிதா, வரும் மக்களவை தேர்தல் சாதாரணமான தேர்தல் அல்ல என்றும், நாட்டின் தலைவிதியை மாற்றக் கூடிய தேர்தல் என்றும் தெரிவித்தார்.
நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமங்களில் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் கட்டணமில்லா கல்வி அளிக்கப்படுகிறது என்றும், அரசின் நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள் என்றும் கூறினார்.
உயர் கல்வியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், உயர் கல்வி, மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று குறிப்பிட்ட ஜெயலலிதா, தமிழகத்தில் ஏராளமான நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும், மாணவர்கள் நலன் கருதி அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு கையகப்படுத்தியது என்றும் கூறினார்.