ஆர்.கே.நகரில் ரூ.180 கோடி நலத்திட்ட பணிகளை துவக்கிவைத்து, உணர்ச்சி பொங்க உரையாற்றிய ஜெயலலிதா!
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.180.41 கோடி செலவில் திட்டப் பணிகளை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு புதிய திட்டப்பணிகளை தொடங்கிவைக்கவும், அடிக்கல் நாட்டவும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்று வருகை புரிந்தார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி ஆர்.கே.நகர் தொகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
புதிய திட்டங்கள்...
தண்டையார்பேட்டையில் உள்ள அரசு அச்சக வளாகத்தில் இந்த விழா நடைபெற்றது. அப்போது, ரூ.180 கோடியே 41 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிவைத்த ஜெயலலிதா, ரூ.193 கோடியே 26 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
பாலங்கள்...
ரூ.92 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் சென்னை மீன்பிடி துறைமுகத்தின் நவீனமயமாக்கும் திட்டம், ரூ.63 கோடியே 98 லட்சம் செலவிலான பவர்குப்பம், ரங்கநாதபுரத்தில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகள், ரூ.16 கோடியே 66 லட்சம் செலவில் கட்டப்பட்ட கத்திவாக்கம் - காக்ரேன் பேசின் சாலை, ரயில்வே மேம்பாலம், ரூ.9 லட்சத்து 94 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா குடிநீர் நிலையம், கார்னேசன் நகர் சென்னை நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் ஒரு கோடியே 18 லட்சம் செலவில் கட்டப்பட்ட 12 கூடுதல் வகுப்பறைகள், ரூ.5 கோடியே 87 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இதர பணிகள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
அடிக்கல்...
இதேபோல், எண்ணூர் - மணலி சாலையில் ரூ.117 கோடியே 47 லட்சம் செலவில் கட்டப்பட இருக்கும் ரயில்வே மேம்பாலம், ரூ.25 கோடியே 66 லட்சம் செலவில் கட்டப்பட இருக்கும் தொழில்நுட்ப கல்லூரி, ரூ.10 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட இருக்கும் கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் இணைப்பு கால்வாய் கான்கிரீட் சுவர், பக்காவட்டு சாலை, புதுவண்ணாரப்பேட்டையில் ரூ.3 கோடியே 33 லட்சம் செலவில் கட்டப்பட இருக்கும் காவலர் குடியிருப்புகள், ரூ.3 கோடியே 62 லட்சம் செலவில் கட்டப்பட இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக்கட்டிடம் மற்றும் ரூ.32 கோடியே 93 லட்சம் செலவிலான இதர பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
மின்வெட்டே இல்லை...
இந்தத் திட்டங்களை தொடங்கி வைத்த ஜெயலலிதா, விழாவில் பேசுகையில், ‘தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலையானது ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
வளர்ச்சி மட்டுமே குறிக்கோள்...
ஏழை, நலிவடைந்தோர் நல வாழ்வுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை மட்டும் குறிக்கோளாக கொண்டு அரசு செயல்படுகிறது.
புதிய கட்டிடம்...
தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலவத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஆர்.கே.நகர்...
என்னை முதல்வராக்கிய ஆர்.கே.நகர் தொகுதியை எப்போதும் மறக்க மாட்டேன். ஆர்.கே.நகர் தொகுதியில் 2 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கப்படும். பொதுமக்களின் குறைகளை போக்க அம்மா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன' என்றார்.