கபாலி ரிலீஸ் திருவிழா: ரஜினி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருப்பு
சென்னை: கபாலி திரைப்படத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தமிழக சினிமா வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு திரையரங்குகளில் கபாலி திரைப்படம் திரையிடப்பட உள்ளது. சென்னையில் பிரம்மாண்ட கட் அவுட்டிற்கு இப்போதே பாலபிஷேகம் செய்யத் தொடங்கி விட்டனர்.
திருவிழா நேரத்தில் வெளிவந்தால் அது மற்ற நடிகர்களின் படம். ஆனால் கபாலி ரிலீஸை திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
கபாலி படம் நாளை ரிலீஸ் ஆனாலும் இன்றே கொண்டாட்டத்தை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். தமிழகம் முழுவதும் அனைத்து நகரங்களிலும் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்-அவுட்டுக்கள் நிறுவப்பட்டுள்ளன.
சென்னையில் தியேட்டர்களில் வரிசையாக கட் அவுட்டுகள் கண்ணை பறிக்கின்றன. கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாலும் இன்றே சில ரசிகர்கள் பாலபிஷேகம் செய்ய ஆரம்பித்துள்ளனர். நாளை எத்தனை ஆயிரம் லிட்டர் பால் வீணாகப் போகிறதோ?
அதிகாலையில் ரிலீஸ் ஆக உள்ள படத்தைக் காண பல தியேட்டர் வாசல்களில் இப்போதே வரிசையில் நிற்கத்தொடங்கியுள்ளனர். துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்,கபாலி திரைப்படத்தின் ரிலீசை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர்.