கலிங்கபட்டி டாஸ்மாக் மூடல்.. எனது தாயார் மாரியம்மாளுக்குக் கிடைத்த வெற்றி - வைகோ
டாஸ்மாக் கடையை மூட உத்தரிவிட்டுள்ளது எனது தாயார் மாரியம்மாள் தலைமையில் கலிங்கப்பட்டி கிராமத்துத் தாய்மார்களும், பொதுமக்களும் நடத்திய அறப்போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என வைகோ கூறியுள்ளார்.
சென்னை: கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, நினைவில் வாழும் எனது தாயார் மாரியம்மாளுக்கு கிடைத்த வெற்றி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆகும். இங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடந்த ஆண்டு வைகோவின் தாயார் மாரியம்மாள் தலைமையில் பெரும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதலும் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி உத்தரவிட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த வை.ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில், நீதியரசர் நாகமுத்து, நீதியரசர் முரளிதரன் அமர்வு, டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்ற உத்தரவிட்டு இன்று வழங்கியுள்ள தீர்ப்பு, " நினைவில் வாழும் எனது தாயார் மாரியம்மாள் அவர்கள் தலைமையில் கலிங்கப்பட்டி கிராமத்துத் தாய்மார்களும், பொதுமக்களும் நடத்திய அறப்போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications