காவிரி- நல்லகண்ணு தலைமையில் கமல் கூட்டம்- புதிய கூட்டணிக்கு முன்னோட்டமா?
காவிரி பிரச்சனைக்கான கூட்டத்துக்கு அனைத்து கட்சிகள், விவசாய சங்கங்களை அழைத்துள்ளார் கமல்ஹாசன்.
Recommended Video

சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனைக்காக மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு தலைமையில் கமல்ஹாசன் கூட்டத்தைக் கூட்டுவது புதிய கூட்டணிக்கான முன்னோட்டமா? என்கிற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி விவகாரத்தில் திமுகவுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் கட்சிகள், விவசாயிகள் அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வந்தன. தற்போது புதிதாக கட்சி தொடங்கிய கமல்ஹாசன் காவிரிக்காக கூட்டத்தைக் கூட்டுவதாக அறிவித்திருக்கிறார்.

அதுவும் மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புதான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை திமுக கூட்டணியில் இருந்து கழற்றிவிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் தினகரனுடன் இணைந்து ஒரு புதிய அணியை காங்கிரஸ் உருவாக்க வாய்ப்புகள் உண்டு.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்தான் இருப்போம் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் திட்டவட்டமாக அண்மையில் டெல்லியில் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் சசிகலா குடும்பத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதால் தினகரன் இடம்பெறும் கூட்டணியில் இடதுசாரிகள் இடம்பெறுவதில் தயக்கம் காட்டுகின்றனர் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் காவிரிக்காக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்துக்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தலைமை வகிப்பார் என கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.
இதுதான் பரபரப்பை கிளப்பியுள்ளது. திமுகவுடன் இதுவரை இணைந்திருந்த கட்சிகள், விவசாயிகள் அமைப்பு இப்போது கமலுடன் கைகோர்க்கின்றன. இது அதிமுக- திமுகவுக்கு மாற்றான ஒரு புதிய கூட்டணிக்கான முன்னோட்டமாகவும் இருக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இப்படியான ஒரு கூட்டணி அமைவதால் அதிமுக அல்லது பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இது அதிமுக, பாஜகவுக்கு சாதகமானதாகவும் இருக்கக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications