கங்கை அமரன் பண்ணை வீடு உட்பட 112 ஏக்கர் நிலங்களை அபகரித்தாரா சசிகலா? போலீஸார் விசாரணை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 112 ஏக்கர் நிலங்களை அபகரித்ததாக சசிகலா மீதான புகார் குறித்து மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கங்கை அமரனின் பண்ணை வீடு உள்பட 112 ஏக்கர் நிலங்களை அபகரித்ததாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் 9-ஆம் தேதி புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் சிறுதாவூர் பகுதியில் கங்கை அமரன் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் மிரட்டி 112 ஏக்கர் நிலங்களை பறித்துக் கொண்டனர்.
இந்த நில அபகரிப்பில் அரசு புறம்போக்கு நிலங்களும், குளம், குட்டைகளும் அடங்கும். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கண்ணன் என்பவரிடமிருந்தும் அவருக்கு சொந்தமான ரூ.4.5 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்களை சமர்ப்பித்து அபகரித்துள்ளனர்.
திரைப்பட இயக்குனர் கங்கை அமரன் மற்றும் அவரது மனைவி மணிமேகலை பெயரில் பையனூர் கிராமத்தில் இருந்த 22 ஏக்கர் நிலமும் அபகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 2000-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி விசாரணை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலா உள்ளிட்டோர் மீது புகார் அளிக்க வந்த கண்ணனிடம் எஸ்.பி விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் கங்கை அமரனும் தனது வீட்டை மிரட்டி வாங்கியதாக சசிகலா தரப்பினர் மீது ஊடகங்களில் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதனால் சசிகலா மீதான புகார் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டதன்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.