நித்தியானந்தா ஆதரவாளர்களை வெளியேற்ற முடியாது.. தொண்டை மண்டல ஆதீனம்
காஞ்சிபுரம்: நித்தியானந்தா சீடர்கள் இங்குதான் இருப்பார்கள். அவர்கள் இங்கு பூஜை செய்ய எந்தத் தடையும் இல்லை. அவர்களை வெளியேற்ற முடியாது என்று காஞ்சிபுரத்தில் உள்ள தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாசம் திட்டவட்டமாக கூறி விட்டார்.
இந்த ஆதீன மடத்துக்கு ரூ1,000 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இந்த மடத்தின் ஆதீனம் ஞானபிரகாசம் திடீரென காணாமல் போனார். இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது.
ஏற்கனவே மதுரை ஆதீன மடத்தின் சர்ச்சையில் சிக்கிய நித்தியானந்தாவின் சீடர்கள்தான் இந்த ஆதீனத்தையும் கடத்தியதாக கடந்த ஞாயிறன்று காஞ்சிபுரம் பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆதீனம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஆதீனம் ஞானபிரகாசம் மடத்துக்கு திரும்பினார். பெங்களூரு பிடதியில் இருந்து ஆதீனம் ஞானபிரகாசம் மடத்துக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆதீனம்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நித்தியானந்தா ஆதரவாளர்களை வெளியேற்ற முடியாது. அவர்கள் மடத்தில் பூஜை செய்ய உரிமை உள்ளது. அவர்களை யாரும் தடை செய்ய முடியாது. இதனால் என்ன வந்தாலும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று ஆதீனம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆதீனத்தின் இந்தப் பேச்சால் காஞ்சிபுரத்தில் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இப்படித்தான் மதுரை ஆதீனம், நித்தியானந்தா பிடியில் சென்றபோது மதுரையில் பெரும் மோதல் வெடித்தது என்பது நினைவிருக்கலாம்.