கருணாநிதி சமாதிக்கு சென்று ஆசி பெற்ற ஸ்டாலின்... கனிமொழிக்கு அழைப்பில்லையாமே!
சென்னை: திமுக செயல்தலைவராக உள்ள ஸ்டாலின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கருணாநிதி சமாதியில் ஆசி வாங்க சென்றார். அந்த நிகழ்ச்சிக்கு கனிமொழிக்கு அழைப்பில்லாததால் அவர் வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து திமுக தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே அழகிரியும் திமுகவுக்கு வர பல்வேறு தகிடுதத்தங்களை செய்து வந்ததால் அவசர அவசரமாக பொதுக் குழு கூடியது.
இதில் ஸ்டாலினை திமுக தலைவராக தேர்வு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டு வரும் 28-ஆம் தேதி பொதுக் குழு கூடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
துரைமுருகன்
இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக செயல்தலைவராக உள்ள ஸ்டாலின் தலைவர் பதவிக்கும் திமுக முதன்மை செயலாளராக உள்ள துரைமுருகன் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
கோபாலபுரத்துக்கு
இருவரும் தங்கள் வேட்புமனுக்களை எடுத்துக் கொண்டு கருணாநிதியின் சமாதிக்கு சென்று ஆசி பெற்றனர். இதையடுத்து கோபாலபுரத்துக்கு சென்ற இருவரையும் தயாநிதி மாறன், தமிழரசு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கனிமொழி வருத்தம்
கருணாநிதி சமாதியிலும் கோபாலபுரத்திலும் ஆசி வாங்க சென்ற நிகழ்ச்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு அழைப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கும் அழைப்பில்லையாம்.
சிஐடி காலனி டூ அண்ணா அறிவாலயம்
இதனால் கனிமொழி வருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிஐடி காலனியில் உள்ள வீட்டிலிருந்து நேராக அண்ணா அறிவாலயத்துக்கு கனிமொழி புறப்பட்டு சென்றார். அதுபோல் ஆ. ராசாவும் நேராக அண்ணா அறிவாலயத்துக்கு சென்றுவிட்டார். இருவருக்கும் அழைப்பு விடுக்காதது குறித்து கட்சியில் சலசலப்பு எழுந்துள்ளது.