வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிமுக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன... கனிமொழி
சென்னை: மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத அ.தி.மு.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டு இருக்கின்றன... விரைவில் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சி எம்.பியும் மகளிரணி செயலாளருமான கனிமொழி கூறியுள்ளார்.
அ.தி.மு.க. அரசை கண்டித்தும், மதுவிலக்கை வலியுறுத்தியும் தி.மு.க. மகளிர் அணி சார்பில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்று நடத்திய மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:
மக்களுக்கு தந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் தமிழகத்தில் எங்குமே முதியோர் உதவித்தொகை யாருக்கும் கிடைப்பதில்லை. இதை போல கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை, திருமண உதவித்தொகை ஆகியவையும் கிடைக்கவில்லை. இலவச மிக்சி, கிரைண்டர் பலருக்கும் கிடைக்கவில்லை. மக்கள் நல திட்டங்கள் எதுவும் மக்களை சென்றடையவில்லை.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பாக இல்லை. ஆண்கள், பெண்கள் என யாரும் தைரியமாக வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் தான் தமிழகம் முன்னேறி உள்ளது.
மதுவிலக்குக்காக போராடி உயிர்நீத்த காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு பிறகு தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் உள்பட பலரும் மதுவிலக்கு வேண்டி போராட்டம் நடத்தினர். ஆனால் போராடிய அனைவரையும் சிறைப்பிடித்த அரசு இந்த அ.தி.மு.க. அரசு. வருவாய் இழப்பை காரணம் காட்டி மதுவிலக்கை கொண்டு வர முடியாத என சட்டமன்றத்திலேயே அமைச்சர் கூறுகிறார். விரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வரும். அத்தனை மதுக்கடைகளையும் மூடுவோம். மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று தி.மு.க. தலைவர் அறிவித்து உள்ளார்.
இந்த ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்து உள்ளது. புதிதாக எந்த தொழிற்சாலைகளும் தொடங்கப்படவில்லை. இங்கு இருக்கும் தொழிற்சாலைகளும் மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது தமிழகத்தில் பல ஆயிரம் கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும் என்றார்கள். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறாக எதை பற்றியும் சிந்திக்காத இந்த ஆட்சி தேவையா? என மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டு இருக்கிறது. இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது விரைவில் தி.மு.க. ஆட்சி உறுதி செய்யப்பட்டு விட்டது என்றே கருதுகிறேன்.
தமிழகத்தில் ஒரு மாற்றம் வரவேண்டும். விடியல் ஏற்பட வேண்டும். தி.மு.க. தலைவர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.