மு.க. ஸ்டாலினுடன் கபில் சிபல் சந்திப்பு
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் கபில் சிபில் சென்னையில் இன்று சந்தித்தார்.
சென்னை : முதல்வர் பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு விசாரணைக்குப் பின்னர், இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் கபில் சிபில் ஸ்டாலினை சந்தித்தார்.
19 எம்எல்ஏக்களின் ஆதரவை இழந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட கோரி ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அமைச்சருமான கபில்சிபில் ஆஜராகி வாதாடினார்.
நீதிமன்றம் உத்தரவிடாவிட்டால் மைனாரிட்டி அரசு சட்டவிரோதமாக தொடரும். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது முதல்வரின் கடமை. பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பாக, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும். பெரும்பான்மையே இல்லாமல், அதிமுக அரசு தொடருவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் வாதிட்டார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை மீண்டும் அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றதா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்று தெரிகிறது. இதனிடையே வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கபில் சிபில் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார்.
தம்முடைய வழக்கில் கபில் சிபில் ஆஜரானார் என்பதைத் தாண்டி கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த அரசியல்வாதி என்ற நிலையில் இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து அப்போது விவாதித்ததாக தெரிகிறது.