முதல் மனைவியின் புகார்- 2வது கல்யாணத்தை முடித்து விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவர் கைது
காரைக்குடி: காரைக்குடியில் முதல் மனைவி இருக்கும்போதே, இரண்டாவது திருமணம் செய்த பொறியாளர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் கார்த்திக்.
இவர் பி.இ படித்து முடித்து விட்டு லண்டனில் சிவில் எஞ்சினியராக பணிபுரிந்து வருகிறார்.
தரகர் மூலமாக திருமண ஏற்பாடு:
இவருக்கு திருமணம் முடிக்க இவரது குடும்பத்தினர் காரைக்குடியை சேர்ந்த பெண் தரகர் மூலமாக மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்தனர்.
திருமண ஏற்பாடுகள் மும்முரம்:
பின்னர் அந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காரைக்குடியில் ஒரு தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதையடுத்து நேற்று காலை திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.
ஆன்லைனில் புகார்:
இந்நிலையில் மதுரை அருள்நகரைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவருடைய மகள் சவுகார்த்திகா சென்னையில் இருந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக ஒரு புகார் மனுவை அளித்தார்.
ஏற்கனவே திருமணமானவர்:
அந்த மனுவில், காரைக்குடியைச் சேர்ந்த சிவில் எஞ்சினியர் கார்த்திக் என்பவர் என்னை காதலித்து சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு பதிவாளர் அலுவலகத்தில் வைத்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பெற்றோரிடம் அனுமதி:
பின்னர் அவர் என்னிடம், தனது பெற்றோரை சென்று பார்த்து விட்டு அவர்களிடம் நமது திருமணம் விஷயத்தை கூறி அதன் பின்னர் உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறிவிட்டு காரைக்குடிக்கு சென்றார்.
இரண்டாவது திருமணம்:
பின்னர் அவர் அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ள தகவல் குறித்து அறிந்தேன். ஆகவே அந்த திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்த கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல்:
புகார் மனுவுடன் கார்த்திக்குடன் பதிவு திருமணம் செய்த சான்றிதழ் நகலையும் இணைத்து அனுப்பியிருந்தார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து காரைக்குடி வடக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
முடிந்து போன திருமணம்:
இதையடுத்து காரைக்குடி மகளிர் போலீசார் அந்த திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் திருமணம் முடிந்து மதிய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
மணமகன் குடும்பத்துடன் கைது:
இதையடுத்து, 2 ஆவது திருமணம் செய்த மணமகன் கார்த்திக், அவருடைய தந்தை நாகராஜன், தாயார் ஜெயலெட்சுமி, தம்பி ராஜசேகரன், தரகர் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கையும், அவருடைய குடும்பத்தினரையும் கைது செய்துள்ளனர்.