மரம் வளர்ப்போம்.. மழை பெறுவோம்.. காரைக்குடியில் மாணவர்கள் உலக தண்ணீர் தின பேரணி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உலக தண்ணீர் தினம் மார்ச் 22 முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இப்பேரணியை காரைக்குடி நகராட்சி ஆணையர் க. ரங்கராஜ் தலைமையேற்று துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் ஆ.பீட்டர்ராஜா வரவேற்றார்.
இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆலங்குடியர் வீதி நகராட்சிப்பள்ளி மாணவர்கள், ஆலங்குடியர் வீதி நகராட்சிப்பள்ளி தலைமையாசிரியர் கனகராஜ், காரைக்குடி நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தண்ணீர்ப் பிரச்சினை
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு குறுக்கே நிற்ப்பது தண்ணீர் பிரச்சனை தான். நீரின்றி அமையாது உலகு.... என்பது வள்ளுவன் வாக்கு. அனைத்து உயிர்களும் உயிர் வாழ தண்ணீர் மிக அவசியம்.
தண்ணீர் அவசியம்
மரம், கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், மனிதன் என அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் மிக மிக அவசியம். தமிழ்நாட்டில் தண்ணீர் இப்போது விற்பனை பொருளாய், தண்ணீர் பாக்கெட், தண்ணீர் பாட்டில், தண்ணீர் கேன் என்று இப்போது பணம் பண்ணும் தொழிலாகிவிட்டது.
பொய்க்கும் பருவ மழை
பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழைநீரை நாம் தேக்கி வைத்து கொள்ள ஏற்பாடும் செய்து கொள்வதில்லை என்பதே உண்மை. மழைக்காலங்களில் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது.
நீர்ப் பாதுகாப்பு அவசியம்
நீரை பாதுகாக்கவும், சுழலின் சமன்பாட்டை நிலைத்திருக்கச்செய்வதும் மக்கள் கையில்தான் உள்ளது. இக்கருத்துக்களை பொது மக்கள் அறியும் வண்ணம் மாணவர்கள், "மரம் வளர்ப்போம், மழை நீரை பெறுவோம்", "நீரை சேமிப்போம், வருங்கால தலைமுறையை பாதுகாப்போம்" என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணி நடத்தப்பட்டது.
கண்ணதாசன் மணிமண்டபத்தில்
இப்பேரணி இராமநாதன் செட்டியார் நகராட்சிப்பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டு, அம்பேத்கர் சிலை, பெரியார் சிலை, நூறடி ரோடு வழியாக கண்ணதாசன் மணிமண்டபத்தில் நிறைவடைந்தது.