பதவி சுகம் அனுபவித்த பரிதி... முதல் முறையாக கருணாநிதி கருத்து!
பதவி சுகம் அனுபவித்தவர் என்றும் அவர் மறைமுகமாக சுட்டியுள்ளார். இதுகுறித்த கேள்விக்கு அவரது கேள்வி பதில் பாணி அறிக்கை...
கேள்வி: தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்த போது அமைச்சர் பதவியை அனுபவித்த ஒருவர் மீது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 2011இல் போடப்பட்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கை, அவர் தற்போது அ.தி.மு.க. விலே சேர்ந்த நிலையில் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறாரே?
பதில்: எதிர்க்கட்சி என்றால், நடவடிக்கை எடுப்பதும், ஆளுங்கட்சி என்றால் கண்டும் காணாமல் விடப்படுவதையும்தானே கண்டு வருகிறோம். சில மாதங்களுக்கு முன்பு எதிர்க்கட்சியிலே இருந்த ஒருவர் மீது போடப்பட்ட பல அவதூறு வழக்குகள், அவர் ஆளுங்கட்சியிலே சேர்ந்த பிறகு திரும்பப் பெறப்பட்டன.
அதைப்போலவேதான் தற்போதும் நீதிபதி அவர்கள் தன் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் வங்கியில் கடன் வாங்கியதையும், அவருக்கு பரிசாக வந்த பொருள்களையும் விசாரணை அதிகாரி கணக்கிலே கொண்டு வரத் தவறியுள்ளார் என்றும், அவர் மீது போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். காவல் துறையினர் எப்படியெல்லாம் குற்றம்சாட்டி வழக்கு தொடுக்கிறார்கள் என்பதையும் இதன்மூலம் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.
பரிதி இளம்வழுதி குறித்து இதுவரை கருணாநிதி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதுவும் பேசியதில்லை. இப்போதுதான் முதல் முறையாக மறைமுகமாக பரிதி குறித்துப் பேசியுள்ளார்.