2 நாளில் தெரியும் கருப்பசாமி பாண்டியனின் முடிவு!
சென்னை: திமுக கட்சி உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ள கருப்பசாமி பாண்டியன். தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும், இரண்டு தினங்களில் தனது முடிவை அவர் தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர் கருப்பசாமி பாண்டியன். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்த போதும், கருப்பசாமி பாண்டியன் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

பின்னர் கட்சித் தலைமையுடன் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து நெடுஞ்செழியன் தலைமையில் உருவான ஐவர் கூட்டணியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து திமுகவில் இணைந்த கருப்பசாமி பாண்டியனுக்கும், சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் தனித் தனி கோஷ்டியாக மோதி வந்தனர்.
இந்த சூழ்நிலையில், நெல்லை மாவட்டத்தை கிழக்கு, மேற்கு, மத்திய, மாநகர் என கட்சித் தலைமை நான்காக பிரித்தது கருப்பசாமி பாண்டியனுக்கு பிடிக்கவில்லை. நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை மாநகர், புறநகர் என இரண்டு மாவட்டங்களாக மட்டுமே தொடர வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால், கட்சித் தலைமை அதனை ஏற்காமல், நான்காக பிரித்து அமைப்புத் தேர்தலையும் நடத்தியது.
இதனால், கட்சியுடன் அவருக்கு பிணக்கு ஏற்பட்டது. தனது மனக்குமுறலை கூட்டம் ஒன்றில் அவர் வெளிப்படுத்தினார். அதாவது, `கலெக்டராக இருந்துவிட்டு வட்டாட்சியராக பணியாற்ற முடியாது' என தன் மனவேதனையை அவர் மறைமுகமாக தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க, தனது மகன் சங்கரை மத்திய மாவட்டச் செயலாராக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருந்தார். ஆனால், அந்த ஆசையும் நிறைவேறவில்லை. அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களால் கட்சித் தலைமை மீது கருப்பசாமி பாண்டியனுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதனால், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் அவர் விலகியே இருந்தார்.
கருப்பசாமி பாண்டியனின் இத்தகைய நடவடிக்கையால் அவர் திமுகவில் இருந்து வெளியேறி, அதிமுகவில் சேரப் போகிறார் என்ற பேச்சு எழுந்தது.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதும், திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள கருப்பசாமி பாண்டியனின் கட்சி அலுவலகம் முன்பு அவரது ஆதரவாளர்கள் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாகவும், அதனை கருப்பசாமி பாண்டியனும் வேடிக்கைப் பார்த்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்த செய்தியின் அடிப்படையில், அவரை கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.
இது தொடர்பாக கருப்பசாமி பாண்டியன் தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார். ஆனால், ரகசியமாக தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, இன்னும் இரண்டு நாட்களில் அவர் தனது முடிவை அறிவிப்பார் என அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications