சசிகலா பரோலில் வந்தபோது ரூ. 600 கோடி சொத்துகள் பெயர் மாற்றம்?. "ஐடி" பிடியில் கிருஷ்ணபிரியா
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு துறை அதிகாரிகள் முன்பு இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா ஆஜரானார்.
சென்னை : சென்னையில் உள்ள வருமான வரி துறை அலுவலகத்தில் இளவரசியின் மகளும் விவேக்கின் சகோதரியுமான கிருஷ்ணப்பிரியா ஆஜராகியுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் மாபெரும் ரெய்டு நடத்தினர். 5 நாள்களாக தொடர்ந்து நடைபெற்ற ரெய்டை அடுத்து ஒவ்வொரு நாள் ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைக்கின்றனர்,
முதலில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவக்குமார், வெங்கடேஷ், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், விவேக் உள்ளிட்டோரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறையிலிருந்து பரோலில் வந்த சசிகலா, தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியிருந்தார்.
அப்போது அந்த 5 நாள்களில் ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை பெயர் மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கும் கிருஷ்ணப்பிரியாவுக்கும் தொடர்பு இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணைக்கு இளவரசியின் இன்னொரு மகள் ஷகிலாவும் ஆஜராகியுள்ளார். இவர் மிடாஸ் மதுபான ஆலையில் முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.