நதிகளை இணைக்க பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: குமரி அனந்தன் கோரிக்கை
ஈரோடு: இந்திய நதிகளை இணைக்க பிரதமர் மோடி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தமிழக காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன்.
இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்கள் மத்தியில் குமரி அனந்தன் கூறியதாவது :-
காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பூரண மதுவிலக்கை அமுல்படுத்தினார். தற்போது அவர் பிரதமரான பிறகு முதன்முதலாக நாடாளுமன்றத்தில் பேசிய போது, இந்தியாவில் பூரண மதுவிலக்கு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதேபோல நதிகளை இணைப்பது சம்பந்தமாகவும் மோடி பேசவில்லை.
நதிகளை இணைக்க வேண்டும் என்று நான் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, நதிகளை இணைப்பதற்கு சாத்திய கூறுகள் உள்ளது. எனவே நதிகளை இணைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.
எனவே நதிகளை இணைப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதால் பிரதமர் மோடி, நதிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.