கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு.. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது மதுரை கோர்ட்
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் தாளாளர் உட்பட 10 பேர் மேல்முறையீட்டில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை: கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் தாளாளர் உட்பட 10 பேர் மேல்முறையீடு செய்த வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தது.
கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாகினர். இதில் 16 குழந்தைகள் தீ காயங்களுடன் உயிர் தப்பினர்.
பத்தாண்டுகள் கழித்து 2014 ஆம் ஆண்டு ஜூலை 30ம் தேதி இந்த வழக்கில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி (85) அவரது மனைவி உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்தும், தண்டனையை ரத்து செய்யக்கோரி சிறையில் உள்ள 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கை தேதி குறிப்பிடபடாமல் ஒத்திவைத்துள்ளது.