மறக்க முடியுமா?... கும்பகோணம் மகாமகம் சோகம்!
சென்னை: கும்பகோணத்தில் 1992ம் ஆண்டு நடந்த மகாமகம் சோகத்தை கும்பகோணம் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் மறக்க முடியாது.
1992ம் ஆண்டு நடந்த அந்த சோக சம்பவத்தில் 60 பேர் மகாமகம் குளத்தில் மூழ்க்கியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் பலியானார்கள். அந்த நாளில் முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் அங்கு நீராட வந்ததால் கூடிய பெரும் கூட்டமே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாமகம் சோகம் குறித்த ஒரு பிளாஷ்பேக்...
ஒரு பிளாஷ்பேக்....!
அது 1992ம் ஆண்டு. ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு வந்து ஒரு வருடம் முடிந்திருந்தது. கும்பகோணத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் 1992ம் ஆண்டு வந்தது.
புனித நீராட வந்த ஜெயலிதா
இதில் கலந்து கொண்டு புனித நீராட முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார். இதையடுத்து தனது தோழி சசிகலாவுடன் அவர் கும்பகோணம் வந்தார். ஜெயலலிதா வருகையைத் தொடர்ந்து அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டு மகாமகக் குளக்கரையில் இவர்கள் மட்டும் தனித்து நீராட தனி இடம் அமைத்து தடபுடல் செய்தனர் அதிகாரிகள்.
லட்சக்கணக்கில் பக்தர்கள்
மேலும் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள் கூட்ட நெரிசலை சரி செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் யலலிதாவும், சசிகலாவும் நீராடினர். அவர் தலையில் இவர் தண்ணீர் ஊற்ற, இவர் தலையில் அவர் தண்ணீர் ஊற்ற அமோகமாக நடந்தேறியது புனித நீராடல்.
போலீஸார் கெடுபிடி
ஜெயலலிதா வருகைக்காக முதல் நாளிலிருந்தே போலீஸார் கடும் கெடுபிடி காட்டி வந்தனர். ஆனால் அந்தக் கெடுபிடிகளுக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் குதித்ததால் முதல்நாள் பக்தர்கள் புனித நீராட அனுமதித்தனர். இதனால் முதல் நாளில் பல ஆயிரம் பேர் புனித நீராடினர்.
பிப்ரவரி 26, 1992
மகாமக தினத்தன்று அதாவது பிப்ரவரி 26ம் தேதி காலையில் பக்தர்கள் புனித நீராடலுக்குத் தயாராக குவியத் தொடங்கினர். காலையில் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் 10 மணி போல கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த சமயத்தில்தான் ஜெயலலிதா குளிப்பதற்காக வரவிருந்தார். இதனால் குளிக்க வந்த பக்தர்கள் ஜெயலலிதாவைப் பார்க்கும் ஆவலில் கலையாமல் நின்று விட்டனர். இதனால் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.
பல ஆயிரம் பேர் திரண்டனர்
குளத்திர்குள் 40 ஆயிரம் பேர் வரைதான் குளிக்க முடியும். ஆனால் அதை விட இரண்டு மடங்கு கூட்டம் அப்பகுதி முழுவதும் வியாபித்திருந்தது. கூட்டம் வருவதைத் தடுக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
கட்டடச் சுவர் இடிந்து விபத்து
முற்பகல் 11.30 மணியளவில் சசிகலாவுடன் குளிக்க வந்தார் ஜெயலலிதா. குளக்கரைக்கு வந்த அவர் படிக்கட்டில் நின்றபடி பக்தர்களை நோக்கி கை அசைத்தார். இதனால் கூட்டத்தினர் ஆரவாரத்துடன் முண்டியடித்தனர். அந்த சமயம், பாங்கூர் தர்மசாலா கட்டடத்தின் வெளிப்புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச் சுவர் மீது பலர் ஏறி ஜெயலலிதாவைப் பார்க்க முயன்றனர். அதில் இரும்பு கிரில் சுவரோடு சாய்ந்தது அங்கேயே சிலர் நசுங்கி இறந்தனர்.
கண்டு கொள்ளாமல் குளித்த ஜெ., சசி
இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. பக்தர்கள் அங்குமிங்கும் ஓடியதில் கூட்ட நெரிசலில் பலர் குளத்திலேயே சிக்கி பலியானார்கள். இவ்வளவு நடந்தும் கூட முதல்வரும், சசிகலாவும் குளிப்பதில்தான் கவனமாக இருந்தனர். பின்னர் அவர்களைப் பாதுகாப்புடன் போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
60 பேர் பலி
இந்த கோரச் சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தனர். கும்பகோணத்தில் பல காலமாக இந்த மகாமகம் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை இப்படிப்பட்ட விபத்து நடந்ததில்லை என்பது மிகப் பெரிய சோக வடுவாக அமைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.