போகாத கூட்டணி இல்லை... மதிமுக அங்கம் வகித்த கூட்டணிகள் – அன்று முதல் இன்று வரை!
சென்னை: மதிமுக கட்சியானது தான் அங்கம் வகித்து வந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்று விலகியுள்ள நிலையில் கடந்த 1994 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வைகோவால் துவங்கப்பட்டது முதல் இன்றுவரை பல்வேறு கூட்டணிகளில் அங்கம் வகித்து வந்துள்ளது.
கடந்த 1993 ஆம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து விலகிய வைகோ 1994 ஆம் ஆண்டில், மதிமுகவை ஆரம்பித்தார்.
அந்தச் சூட்டோடு சூடாக, 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற 11ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டது. ஆனால், கிட்டதட்ட 15 லட்சம் ஓட்டுகளைப் பெற்று எந்த இடங்களிலும் வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவியது மதிமுக.
அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது.
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற 12 ஆவது நாடாளுமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக் கூட்டணியில் பாஜக மற்றும் அதிமுக கட்சியுடன் இணைந்து சிவகாசி, பழனி, திண்டிவனம் ஆகிய மூன்று இடங்களில் வெற்றி பெற்றது. மேலும், பாஜக தலைமையிலான மத்திய அரசு அமைவதற்கு ஆதரவு அளித்தது.
மீண்டும், 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் திமுக கட்சிகளின் கூட்டணியில் அமைந்த தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்து சிவகாசி, பொள்ளாச்சி, திண்டிவனம், திருச்செங்கோடு ஆகிய நான்கு இடங்களில் வெற்றி பெற்றது.
2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற 12 ஆவது சட்ட மன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுக, ஒரு இடத்தில் கூட வெற்றியைத் தழுவவில்லை.
மீண்டும், 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற 14 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக ஆகியவை இணைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆட்சியில் பங்கு ஏற்காமல் பிரச்சினைகளின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவு அளித்தது. பல்வேறு பிரச்சினைகளில் அரசின் செயல்பாட்டைக் கண்டித்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13 ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த மதிமுக வாசுதேவநல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மீண்டும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியான இந்திய கம்யூனிஸ்ட், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இணைந்து ஒரே இரு இடத்தில் வெற்றி பெற்றது.
அதிமுக கூட்டணியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்திலும், கூட்டணியில் ஏற்பட்ட மனவருத்தங்களாலும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 14 ஆவது சட்ட மன்றத் தேர்தலை முழுவதுமாக புறக்கணித்தது மதிமுக.
இந்த நிலையில்தான், 2014 ஆம் ஆண்டான இந்த வருடத்தில் நடைபெற்ற 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, கொமதேக, ஐஜேகே கட்சிகளுடன் கூட்டணி வகித்த மதிமுக மீண்டும் ஒரு இடங்களைக் கூடப் பெறவில்லை.
இவ்வாறாக கிட்டதட்ட ஆறேழு முறை கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட மதிமுக, தற்போதைய கூட்டணியான தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து கருத்து வேறுபாடுகள் காரணமாக இன்று வெளியேறியுள்ளது மதிமுக.
தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, பாமக என அனைத்துக் கட்சிகளுடனும் கூட்டணி சேர்ந்து விட்ட ஒரே கட்சி மதிமுகதான் என்பது நினைவிருக்கலாம்.