போரூர் அருகே பைக் மீது லாரி மோதி 2 இளைஞர்கள் பலி.. ஓட்டலுக்கு சாப்பிட சென்றபோது சோகம்
போரூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழைந்தனர்.
பூந்தமல்லி: போரூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக இறந்து போனார்கள். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போரூர் அடுத்த முகலிவாக்கம், சுப்ரமணிய சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் மோகன் 24, துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் முகலிவாக்கம், மகாலட்சுமி நகரை சேர்ந்த மணிகண்டன் 23, வெல்டிங் கடையில் வேலை செய்து கொண்டு உடலில் "டாட்டூ" வரையும் வேலையும் செய்து வந்துள்ளார். உடலில் டாட்டூவை மிக நேர்த்தியாக வரைவதால் டாட்டூ மணி என்றே அவரது நண்பர்கள் அழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று இருவரும் போரூரில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட பைக்கில் சென்றனர். பைக்கை மோகன் ஓட்டினார். பின்னால் மணிகண்டன் அமர்ந்து கொண்டு சென்றார். மவுண்ட் - பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம் சிக்னலில் வந்து திரும்பும்போது நங்கநல்லூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று, மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி மோகன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன மோகன் உடலை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் திருவள்ளுவர் மாவட்டம், மேலக்கோட்டையூரை சேர்ந்த முனுசாமி 45, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற போது ஏற்பட்ட விபத்தில் நண்பர்கள் இரண்டு பேர் இறந்து போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.