என் புருஷன நீதான் லவ் பண்றீயா.. கொடைக்கானலில் கல்லூரி மாணவியை தாக்கிய மனைவி.. சட்டென நடந்த விபரீதம்
கொடைக்கானலில் கார் டிரைவருடனான காதலை கண்டித்து தாக்குதல் நடத்தியதால் மனம் உடைந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கார் டிரைவருடனான காதலை கண்டித்து தாக்குதல் நடத்தியதால் மனம் உடைந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சி நாயக்கன்பட்டி அருகே உள்ள கிராமம் குரும்பபட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல். அவருடைய மகள் விஜயஸ்ரீ வயது 19. இவர், கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.
இதற்காக அட்டுவம்பட்டி பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து, தனது சகோதரி ரித்திகாவுடன் விஜயஸ்ரீ தங்கியுள்ளார். கொடைக்கானலில் கல்லூரிக்கு படிக்க போன விஜயஸ்ரீ அதே பகுதியை சேர்ந்த ஆபேல் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.

விரக்தி
ஆபேலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்ததை மறைத்துவிட்டு காதலித்துள்ளார். இது தெரியாமலேயே விஜயஸ்ரீ காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கார் டிரைவர் ஆபேலின் மனைவி வெண்ணிலாவுக்கு ஒரு கட்டத்தில் காதல் விவகாரம் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் அவர் கண்டித்தார். இதனிடையே விரக்தி அடைந்துள்ளார் விஜய்ஸ்ரீ.

தாக்கி கொலை மிரட்டல்
இதனிடையே கடந்த 18-ந்தேதி விஜயஸ்ரீ தனது வீட்டின் முன்பு நின்று ஆபேலிடம் செல்போனில் பேசி கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு வந்த வெண்ணிலா, விஜயஸ்ரீயுடன் தகராறு செய்து செல்போனை பிடுங்கி தாக்கிவிட்டாராம்.
இதேபோல் அங்கு வந்த ஆபேல், அவரது தாயார் நான்சி, வெண்ணிலாவின் தாயார் வேளாங்கண்ணி ஆகியோரும் சேர்ந்து விஜயஸ்ரீயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

விபரீதம்
இதனால் வேதனை அடைந்த விஜயஸ்ரீ, வீட்டுக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயஸ்ரீ நேற்று பரிதாபமாக இறந்தார்.

மனைவி கைது
இதுகுறித்து மாணவியின் சகோதரி ரித்திகா, கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய பாண்டியன் வழக்குப்பதிவு செய்து வெண்ணிலா, வேளாங்கண்ணி, நான்சி ஆகியோரை கைது செய்தார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான ஆபேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications