நல்லவேளை உள்தாளோடு "அம்மா ஸ்டிக்கரையும்" ஒட்டாம விட்டாங்களே!
சென்னை: வர வர இந்த அதிமுக அரசின் செயல்பாடு ரொம்பவே துயரப்படுத்தி வருகிறது மக்களை. இந்த ஆண்டும் ரேஷன் கார்டு புதிதாக தரப்பட மாட்டாது. மறுபடியும் உள்தாள்தான் என்று கூறியுள்ளது அதிமுக அரசு.
அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் பெரும் கடுப்பாகியுள்ளனர். காரணம், ஏற்கனவே கார்டுகள் எல்லாம் அந்து போய் பிச்சைக்காரரரின் பை போல பரிதாபமாக காட்சி தருகிறது.
உள்ளே அடுத்தடுத்து ஒட்டப்பட்ட முந்தைய தாள்கள் எல்லாம் நைந்து போய்க் காணப்படுகின்றன. இந்த நிலையில் மறுபடியும் உள்தாள்தான் என்ற அறிவிப்பு மக்களை ரொம்பவே வெறுப்பேற்றியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 34,200 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 1,99,97,000 பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரேஷன் கார்டும் 5 ஆண்டுகள் செல்லத்தக்க வகையில் வழங்கப்பட்டு வந்தது.
கடைசியாக 2005-ம் ஆண்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது. இந்த கார்டுகள் 2009-ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது. அதன்பிறகு, புதிய கார்டுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டப்பட்டு வந்தது. இப்படியே, 6 ஆண்டுகளை ஓட்டி விட்டனர்.
கடந்த ஆண்டு இறுதியில், ரேஷன் கார்டுகளில் 2015-ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும்போது, கூடுதலாக 2016-ம் ஆண்டுக்கான உள்தாளும் அதில் சேர்ந்தே இடம் பெற்றிருந்தது. எனவே, அந்த உள்தாளையே 2016-ம் ஆண்டுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு போற்றும் நான்காண்டு ஆட்சியின் மற்றுமொரு மகத்தான சாதனை. ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றுவோம் என 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது அதிமுக கூறியது. ஆனால் கடைசி வரைக்கும் கார்டை கண்ணிலேயே காட்டாமல் தாள் ஒட்டிய ஓட்டி விட்டார்கள்.
நல்லவேளை உள்தாளோடு சேர்த்து அம்மா ஸ்டிக்கரையும் ஒட்டாமல் விட்டார்களே!