முகாந்திரம் இருந்தால் எச். ராஜா மீது வழக்கு பதியலாம்... ஹைகோர்ட் உத்தரவு!
பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்ட போது அது குறித்து முகநூலில் கருத்து பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் எதிர்காலத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கூறி இருந்தார். எச். ராஜாவின் இந்த கருத்து தமிழகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
எச். ராஜா மீது வழக்கு பதிய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சத்யராஜ், திருமூர்த்தி உள்ளிட்டோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் ராஜா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை, இதனால் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முகாந்திரம் இருந்தால் எச். ராஜா மீதான வழக்குகளை விசாரிக்கலாம், மேலும் எச். ராஜா மீது வழக்கும் பதிவு செய்யலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.