மதுரையில் வரலாறு காணாத தொடர் மழை.. கண்மாய்கள் உடைந்தன.. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
அடிப்படை வசதி கோரி அவனியாபுரம் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
Recommended Video
மதுரை: மதுரையில் கடந்த 2 நாட்களாக பெய்து வந்த கன மழை காரணமாக சில கண்மாய்களின் கரைகள் உடைப்பெடுத்துள்ளன. இதனால் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மழை நீரும், கழிவு நீரும் இரண்டும் சேர்ந்து எங்களை பாடாய் படுத்தி நோய்களை உண்டாக்கி வருகின்றன என்றும் அதனால் உடனே நடவடிக்கை எடுங்கள் என்று அவனியாபுரம் பகுதி மக்கள் மாநகராட்சிக்கு எதிராக மறியலில் ஈடுபட்டார்கள்.
[நக்கீரன் கோபால் கைதுக்கு தினகரன் வரவேற்பு.. பத்திரிகையாளர்களுக்கும் "அட்வைஸ்"!]
வெள்ளப் பெருக்கு
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. மதுரையிலும் கடந்தஇரு தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்திலும் வெள்ள நீர் புகுந்துவிட்டது.
அடிப்படை வசதிகள்
நேற்று இரவு திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் பேய் மழை பெய்தது. இங்கு அவனியாபுரம் மற்றும் வள்ளானந்தபுரத்தில் உள்ள ஜெ.ஜெ. நகர், துக்ராம் தெருக்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 3ஆயிரம் அதிக அளவு மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்று கூறப்பட்டு வந்தது. மழை நீர் உள்ளே புகுந்துவிட்டால் அவை லேசில் வெளியேறுவதில்லை என்றும் பொதுமக்கள் புலம்பி வந்தனர்.
டெங்கு காய்ச்சல்
இந்நிலையில், இந்த குடியிருப்பு பகுதிகளில் தற்போது மழை நீர் புகுந்து அவர்களின் இயல்பு வாழ்வை அதிகமாகவே பாதித்துள்ளது. மழைநீருடன் கழிவு நீரும் வெளியேற முடியாமல் ரொம்பவும் அவதிப்பட்டு வருகிறார்கள் இப்பகுதி மக்கள். இதனால் இவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவுவதாக கூறப்படுகிறது.
நிலைமை மோசமானது
இதுகுறித்து மதுரை மாநகராட்சியிடம் பல முறை புகார் செய்தும் அதிகாரிகள் எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை என்றும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும்இதுவரை எடுக்கவில்லை என்றும் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இப்படியே விட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த பொதுமக்கள், இன்று காலை மதுரை - அருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் மறியலில் உட்கார்ந்து விட்டார்கள்.
பேச்சுவார்த்தை
சுமார் 1 மணி நடந்த இந்த மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலைக்கு, பள்ளிக்கு செல்வோர் என அனைவரும் இந்த மறியலால் பாதிக்கப்பட்டார்கள். மறியல் குறித்த தகவல் பறந்ததும், போலீசார் விரைந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று போராட்டக்காரர்களுக்கு உறுதியும் அளித்திருக்கிறார்கள்.
|
கண்மாய்கள் உடைந்தன:
இதற்கிடையே, கடச்சனேந்தல், நரசிங்கம் உள்ளிட்ட இடங்களில் கண்மாய் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தவிப்புக்குள்ளாகினர். கரை பலமாக இல்லாததாலும் கண்மாயை சரியாக தூர் வாராத காரணத்தாலும் கண்மாய்க் கரை உடைந்ததாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோல ஆனையூர் கண்மாய் உடைந்ததால் அருகில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. நேற்று இரவு முழுவதும் மக்கள் விடிய விடிய தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
ஆடுகள் பலி:
இதற்கிடையே, மதுரை அருகே மருதங்குளம் என்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் 20 ஆடுகள் உயிரிழந்தன. இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளக்காடான மதுரை
நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததால் மதுரை நகரமே வெள்ளக் காடாகிப் போனது. பல சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கபப்ட்டது. குடியிருப்புகள் பலவற்றில் தண்ணீர் புகுந்துள்ளது. மழைநீர் செல்லும் வடிகால்கள் அடைத்து கொண்டு பல சாலைகள் வெள்ளக் காடாகின. பாண்டி கோவில் பகுதியில் சாலையில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.
அண்ணா நகர், செல்லூர், கோமதிபுரம், வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளக்காடாக காணப்பட்டன. ஆத்திகுளம், புதூர் பகுதியிலும் வெள்ளக்காடாக காணப்பட்டது. ஆத்திகுளம் கண்மாய்க் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் இந்த நிலை.