கீழடி பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் கொடுக்க ஹைகோர்ட் அதிரடி தடை
மதுரை: மதுரை மாவட்டம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால தொன்மை வாய்ந்த பொருட்களை பெங்களூரில் உள்ள மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் வழங்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை இன்று தடை விதித்தது.
மேலும் கீழடி ஆய்வை முதலில் மேற்கொண்டவரான அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையை அக்டோபர் 31ம் தேதி தாக்கல் செய்யுமாறும் ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
கீழடி அகழாய்வை மத்திய அரசு குழி தோண்டிப் புதைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் மதுரை ஹைகோர்ட் கிளையில் கனிமொழிமதி, பிரபாகர் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
[கீழடி அகழாய்வில் தங்க ஆபரணங்கள்.. ஹைகோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு தகவல்]
நீதிபதிகள், சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக தமிழக அரசும், தொல்லியல் துறையும் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தனர். விசாரணைக்குப் பின்னர் மாலையில் பிரபாகர் பாண்டியன் மனு மீது ஒரு உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் முக்கிய அம்சங்கள்:
- கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை மத்திய தொல்லியில் துறையிடம் கொடுக்கக் கூடாது.
- அகழாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எந்தப் பொருளையும் பெங்களூர் தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் தரக் கூடாது.
- கொடுத்த ஆக வேண்டும் என்றால், தமிழக தொல்லியல் துறை ஆணையரிடம் ஒப்படைக்கலாம்.
- அகழாய்வு தொடர்பான அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை அக். 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- மத்திய தொல்லியல் துறை இயக்குநர் விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
- வழக்கு விசாரணை அக்டோபர் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
முன்னதாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், கீழடியில் 4வது கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தி முடிக்கப்பட்டது. கீழடி அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன. 4வது கட்ட அகழாய்வில் கீழடியில் இருந்து பழமையான 7,000 பொருட்கள் கிடைத்தன. பழங்கால விலங்குகளின் எலும்புகள், மீன் உருவம் பொறித்த பானைகள் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்துள்ள பழம் பொருட்களை, அமெரிக்காவிற்கு ஆய்வுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு மையத்திற்கு பொருட்கள் அனுப்பப்படும். கீழடியில் கிடைத்துள்ள பழம் பொருட்களின் காலத்தை நிர்ணயிக்க இந்த ஆய்வு பயன்படும். கீழடியில் 5வது கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தால், 5வது கட்ட, அகழாய்வு பணிகள் மீண்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.