கார்த்திகை தீப திருவிழா: தமிழகம் முழுவதும் கோலாகலம்- வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு
சென்னை: கார்த்திகை தீபத் திருவிழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாப்பட்டது. இல்லத்தரசிகள் தங்களின் வீடுகளிலும் வாசல்களிலும் விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபட்டனர்.
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது சிறப்பு பெற்றதாகும். பெரியகார்த்திகை தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.திருவண்ணாமலையில் மகாதீபம் கொண்டாடப்படுவதைப் போல தமிழகம் முழுவதும், சிவன், முருகன்ஆலயங்களில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாப்படுகிறது.
விளக்கேற்றி வழிபாடு
திருவண்ணாமலை அண்ணாலையார் கோவிலில் மலைமீது மகா தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வினை தொலைக்காட்சியில் கண்டவுடன் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி படையலிட்டு வழிபாடு நடத்தினர். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும், சுற்றுச்சுவர், வீட்டுப்படிகள் ஆகிய இடங்களில் விளக்கேற்றி வைத்தனர். குடியிருப்புப் பகுதிகளில் இந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தீபம் ஏற்றப்பட்ட உடன் பல இடங்களில் சிறுவர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகைக்குப் பின்னர் பெரியகார்த்திகை தினத்திற்குத்தான் பட்டாசுகளை வெடித்து சிறப்பாக தீபத்திருநாளை கொண்டாடுகின்றனர்.
திருப்பரங்குன்றம் முருகன்
திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர்17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8 ஆம் நாள் நிகழ்ச்சியாக 24 ஆம் தேதி மாலை பட்டாபிஷேகம் நடைபெற்றது. இன்று காலை தேரோட்டமும், மாலை 6 மணிக்கு பாலதீபம் ஏற்றி, மலைமேல் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16 கால் மண்டபத்தில் சொக்கப்பான் காட்சியும் நடைபெற்றது.
கபாலீஸ்வரர் ஆலயம்
சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீப திருவிழா கோலகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபட்டனர். கோவில் முன்பு சொக்கப்பனை காட்சி நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர்.
சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?
சிவபெருமான் திரிபுரங்களை எரித்த நாள் திருக்கார்த்திகை நாளாகும். சிவன் எரித்த பாவனையை வெளிப்படுத்துவதற்காக சொக்கப்பனை கொளுத்து கின்றனர். மேலும் அடி, முடி தேடிய விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும், ஆதி, அந்தம் இல்லாத அருட்பெரும் ஜோதி வடிவமாக சிவபெருமான் காட்சி கொடுத்தார். நெருப்புக்கு முதலும், முடிவும் கிடையாது. சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்ததை நினைவு கூரும் விதத்திலும் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.விளக்கேற்ற நல்ல நேரம்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை அதன்படி இன்று ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.