காவிரி... சோறு போட்ட தமிழகத்துக்கு துரோகம் செய்வதா? நடிகை ராகினி திவேதிக்கு மன்சூர் அலிகான் கண்டனம்
சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு நீர் தரக் கூடாது என ஆவேசமாக பேசிய நிமிர்ந்து நில் பட நாயகி ராகினி திவேதிக்கு நடிகர் மன்சூர் அலிகான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஆனால் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அனைத்து கன்னட அமைப்புகளும் நேற்று 12 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இதனால் கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
ராகினி திவேதி
இதனிடையே காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட வாருங்கள் என்று நிமிர்ந்து நில் படத்தில் நடித்த நடிகை ராகினி திவேதி ட்விட்டரில் ஆவேச வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன் நேற்று கன்னட திரைநட்சத்திரங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக பேசியிருந்தார்.
தமிழ் படத்திலும்....
ராகினி திவேதியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்தனைக்கும் அவர் தமிழ் உட்பட 5 மொழிகளில் தயாராகும் அம்மா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதனால் அந்த திரைப்படம் வெளியாகும் போது நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும் என்றே கூறப்படுகிறது.
மன்சூர் அலிகான் கண்டனம்
ராகினியின் இந்த பேச்சுக்கு நடிகர் மன்சூர் அலிகான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மன்சூர் அலிகான் கூறியுள்ளதாவது:
சோறு போட்ட தமிழகத்துக்கு...
காவிரியில் தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது. சோறு போட்ட தமிழகத்துக்கு துரோகம் செய்கிறார்கள். விவசாயிகள் கடவுள் போன்றவர்கள். வாழ்வாதாரத்துக்கான உரிமையைத்தான் அவர்கள் கேட்கிறார்கள்.
கேலிக்கூத்தான தேசியம்
கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பதன் மூலம் தேசியத்தை கேலிக்கூத்தாக்கி வருகிறது. இவ்வாறு மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.